சொர்க்கம், நரகம் உண்டா?

in மறுமை சிந்தனை

கடவுளைப் பற்றிச் சரியான ரீதியில் ஆராய்ந்து முடிவுக்கு வந்து விட்டால் மறுமை, சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் நம்புவதற்கு மிகச் சாதாரணமானவையே. இது ஒரு வழி. மற்றொரு வழியாகவும் சொர்க்கம், நரகம் உண்டா? என்பதை உறுதிப்படுத்தலாம். அதுதான் கப்ர் வாழ்க்கை என்பது; கப்ரைத் தோண்டிப் பார்த்தால் யாருமே வாழ்வதைப் பார்க்க முடியாது. கப்ர் வாழ்க்கை என்பதைச் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நல்லவர் கெட்டவர் அனைவரும் கப்ர் வாழ்க்கையை அனுபவிக்கின்றனர் என்பதற்கு இஸ்லாத்தில் ஆதாரங்கள் உள்ளன.

பலர் தீயிட்டுப் பொசுக்கப்படடு சாம்பலாக்கப் படுகின்றனர். அவர்களின் சாம்பல்கள் பல பகுதிகளில் ஓடும் ஆறுகளில் கரைக்கப்படுகின்றன. இவர்கள் குறிப்பிட்ட இடத்தில் அடக்கம் செய்யப்பட வில்லை; மாறாக நாட்டின் பல பகுதிகளிலும் இவர் களின் சாம்பல் பரப்பப்பட்டுள்ளது. அதுபோல் ஒரு மனிதனை காட்டு விலங்குகள் அடித்துச் சாப்பிட்டு விடுகின்றன. அல்லது கடலில் மூழ்கிச் செத்தவன் உடலை கடல் வாழ் உயிரினங்கள் சாப்பிட்டு விடுகின்றன. இவர்களுக்கெல்லாம் கப்ரே இல்லை என்பதால் கப்ர் வாழ்க்கை கிடையாது எனக் கூற முடியாது. எப்படி இவர்கள் உடலை நெருப்பு, விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள் சாப்பிட்டு விடுகின்றனவோ, அது போல் மண்ணில் புதைக்கப் பட்டவன் உடலை மண் சாப்பிட்டு விடுகிறது ஆக, கப்ர் வாழ்க்கை என்பது அடக்கம் செய்யப்பட்ட அந்த இடத்தில்தான் நடக்கிறது என்று நாம் எண்ணக் கூடாது. உடல்தான் அழிகிறதே தவிர அந்த உடலிலிருந்த உயிர், ஆன்மா இறைவனின் கட்டுப்பாட்டில் போய் விடும். அதுதான் கப்ர் வாழ்க்கையை அனுபவிக்கும்

(மறுமையில்) அவர்கள் எழுப்பப்படும் வரை அவர்களுக்கு மறைவான வாழ்க்கை இருக்கிறது. (23:100)

இறந்தவர்களின் உயிர்களைக் கைப்பற்றிய இறைவன் மனித ஜின் வர்க்கங்களின் புலன்களுக்கு எட்டாத வகையில் வைத்து அவர்களின் அந்த வாழ்க்கையை நடத்தாட்டுகிறான் என்பதை இந்த வசனத்தின் வாயிலாக அறிகிறோம். சில கப்ர்களில் வேதனை செய்யப்படுவதை நபி(ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டியிருப்பதாக ஹதீஃத்கள் உள்ளன. அவை மக்களுக்கு இறைச் செய்தியை சொல்ல வந்த இறைத்தூதர் என்ற முறையில் மக்களுக்கு சொல்வதற்காக இறைவனால் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டவை என்பதை விளங்கிக் கொண்டால் குழப்பமில்லை.

“கப்ர் என்பது மறுமையின் நுழைவாயிலாகும். யார் அதி(ல் வேதனையி)லிருந்து விடுவிக்கப் படுகிறாரோ, அவருக்கு அதற்குப் பிறகு வரவிருப்பது (மறுமை) எளிதாக இருக்கும். யார் அதி(ல் வேதனையி)ல் சிக்கிக் கொள்கிறாரோ, அவருக்கு அதற்குப் பிறகு வரவிருப்பது (மறுமை) கடினமாகி விடும். (மேலும்) கப்ரில் நடப்பதை விட பயங்கரமான கொடூரமான காட்சியை நான் பார்த்ததில்லை .” இப்னுமாஜா 4267

ஒருவன் மறுமையில் எதை அனுபவிக்கப்போகிறான் என்பதை இந்த கப்ர் வாழ்க்கை தீர்மானித்து விடும். கப்ரில் ஒருவன் இன்பத்தை அனுபவித்தால் அவன் மறுமையிலும் இன்பத்தைத்தான் அனுபவிப்பான். வேதனையை அனுபவித்தால் மறுமையிலும் வேதனையைத்தான் அனுபவிப்பான் என்பதையும், இந்த கப்ர் வாழ்க்கைதான் மறுமையின் நுழைவாயில் என்பதையும் நபி(ஸல்) அவர்கள் இந்த ஹதீஸின் வாயிலாகச் சொல்லியிருக்கிறார்கள்,

மறுமை சொர்க்கம் நரகம் பற்றிய அறிவுபூர்வமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்காவிட்டாலும், அவற்றின் நுழைவாயிலான இந்த கப்ர் வாழ்க்கை என்பது அறிவுபூர்வமாக உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இந்த கப்ர் வாழ்க்கை உண்மைதான் என்பது நிரூபிக்கப்படும் போது, அதற்கு பிறகு வரப்போகும் சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் உண்டு என்பது தானாகவே நிரூபணமாகி விடும் அல்லவா?.

மனிதனின் கேட்கும் திறனை விட பறவைகள், மிருகங்களுடைய கேட்கும் திறன் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. இதற்கு ஆதாரமாக, 2004ல் இலங்கையில் சுனாமி வந்த பகுதியில், மிருகங்கள் எதுவும் அழியவில்லை. சுனாமி வருவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பே அவை அந்த இடத்தைக் காலி செய்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். சுனாமிக்கு முந்தைய நிகழ்வான நில நடுக்கம் வரப் போவதை ஓரிரு தினங்களுக்கு முன்பே அவை அறிகின்றன எப்படி?

நிலநடுக்கம் வந்த பகுதிகளில் நிலநடுக்கம் வருவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பிருந்தே கட்டி வைக்கப்பட்டிருந்த கால்நடைகள் வழக்கத்துக்கு மாறாக அலை பாய்ந்து கொண்டிருந்ததாக மீடியாக்களில் சொல்லப்படுகிறது. அதாவது நில நடுக்கம் வரப் போவதை ஓரிரு தினங்களுக்கு முன்பே அவை அறிகின்றன எப்படி?

மனித ஜின் வர்க்கங்களின் செவிப்புலனுக்கு எட்டாத பூமிக்குள் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் பூமியடுக்குகள் பாறையடுக்குகள் நகரும் போது ஏற்படும் சப்தத்தை அவை செவியுறுகின்றன. உடனே, சுதந்திரமாக சுற்றித் திரியும் மிருகங்கள் அந்த இடத்தை விட்டு போய் விடுகின்றன. கட்டி வைக்கப்பட்ட, கூண்டிலடைக்கப் பட்ட மிருகங்கள் தப்பியோடுவதற்கு அங்குமிங்கும் அலை பாய்கின்றன.

முற்காலத்தில் கிணறு வெட்டுவதற்காக நீரூற்று இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க குறிப்பிட்ட நிலப்பரப்பில் பசுவை மேய விட்டு அது எந்த இடத்தில் படுத்து ஓய்வெடுக்கிறதோ, அந்த இடத்தில் கிணறு வெட்டியதாக சொல்லப்படுகிறது.

இதுவும் அதே கோணத்தில் உள்ளதுதான். பூமிக்குள் நீரூற்று இருக்கும் இடத்தில் தண்ணீர் சலசலப்பு இருக்கும். மனித ஜின் வர்க்கங்களின் செவிப் புலனுக்கு எட்டாத, தண்ணீர் சலசலக்கும் அந்த ஓசையை பசு செவியுறுகிறது. அந்த நிலப்பரப்பின் ஏனைய இடங்களை விட தண்ணீர் சலசலப்பு ஓசை கேட்கும் அந்த இடம் குளிர்ச்சியாக இருக்கும் என்று எண்ணி பசு அந்த இடத்தில் படுத்து அசை போடுகிறது.

இவையெல்லாம், இன்று உறுதி செய்யப் பட்டவை. இதைத்தான் 1400 வருடங்களுக்கு முன் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

” ஓர் அடியானது உடலை அடக்கம் செய்த பின் அவன் நிராகரித்தவனாகவோ, நயவஞ்சகனாகவோ இருந்தால், இரும்பாலான சுத்தியால் இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது அவன் கத்துவது மனிதர்கள், ஜின்கள் தவிர மற்ற அனைத்து ஜீவராசிகளும் செவியேற்கும். ” புகாரி. 1338

மறுமையின் நுழைவாயிலான கப்ர் வாழ்க்கை என்று ஒன்று உண்டு என்பது இதன் மூலம் உறுதியாகிறது. கப்ர் வாழ்க்கை உறுதி எனும் போது, அதற்குப் பிறகு வரப்போகும் சொர்க்கம், நரகம் என்பதும் உறுதியாகி விடுகிறது அல்லவா? இதையெல்லாம் சொன்ன முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்பதும் உறுதியாகி விடுகிறது அல்லவா? அல்லாஹ் என்று ஒருவன் இருக்கிறான் என்பதும் உறுதியாகி விடுகிறது அல்லவா? அவன் தன் தூதர் வழியாக அருளிய மார்க்கம்தான் இஸ்லாம் என்பதும் உறுதியாகி விடுகிறது அல்லவா?

— முஸ்லிமீன்-ல் உள்ளவன்

Leave a Comment

Previous post:

Next post: