மார்க்க அறிஞர்களே!

in பொதுவானவை

இஸ்லாமிய மார்க்கம் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் மார்க்கம். அல்லாஹ்வுக்கே சொந்தமான மார்க்கம். அல்லாஹ்வின் அதிகாரத்திலுள்ள மார்க்கம். அதில் மனித தலையீட்டிற்கு அறவே அனுமதி இல்லை. (அல்குர்ஆன் 39:3, 5:3, 3:19, 3:85, 42:21, 49:16, 9:31, 7:3, 33:66-68, 30:32, 6:159, 22:78, 4:33, 18:102-106)

இன்னும் இவை போன்ற எண்ணற்ற திருக்குர்ஆன் வசனங்கள் இதை உண்மைப்படுத்தும். ஆயிரம் விளக்கங்கள் கூறினாலும் அதை மனித அறிவு ஏற்றுக்கொண்டாலும் அதைக்கொண்டு அல்லாஹ்வின் ஒரேயொரு கட்டளையைப் புறக்கணித்தாலும் உதாசீனப்படுத்தினாலும் அது இறை நிராகரிப்பில் கொண்டு சேர்க்கும் என்பதில் உண்மை விசுவாசிகளுக்கு சிறிதும் சந்தேகமில்லை. இறைத்தூதர்கள் இந்த விஷயத்தில் மிக மிக எச்சரிக்கையாக நடந்து கொண்டார்கள். தங்களின் சுய அறிவை சிறிதும் மார்க்கத்தில் நுழைக்காமல் அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தார்கள். அதனால் அவர்கள் மக்கள் மன்றத்தில் புறக்கனிக்கப்பட்டாலும், மக்கள் எண்ணற்ற துன்பங்களைத் தந்தாலும் பொறுமையுடன் சகித்துக்கொண்டார்களே அல்லாமல் சத்தியத்தில் எதையும் அது சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் மக்களிடமிருந்து மறைக்கத் துணியவில்லை.

وَمَا عَلَيْنَا إِلاَّ الْبَلاَغُ الْمُبِينُ

இன்னும் எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை. (36:17)

என்ற அல்லாஹ்வின் கட்டளையை சிரமேல் கொண்டு செயல்பட்டார்கள். இன்றைய சூழ்நிலைக்கு இது சாத்தியம், இது சாத்தியமில்லை என்று அவர்களாகச் சுயமதிப்பீடு செய்து மார்க்கப் பிரச்சாரம் செய்யவில்லை. தங்களின் அறிவு ஆற்றலைக்கொண்டு மார்க்கத்தை மக்களிடையே பரப்பிவிட முடியும் என்று தப்புக் கணக்கும் போடவில்லை. நேர்வழிக் காட்டும் முழு அதிகாரமும் அல்லாஹ்வின் கையில் மட்டுமே இருக்கிறது என்பதில் மிகத்தெளிவாக இருந்தார்கள். இப்படி செய்தால் மக்கள் நேர்வழிக்கு வந்து விடுவார்கள்; அப்படிச் செய்தால் மக்கள் அதிகமாகச் சத்திய வழியில் இணைந்து விடுவார்கள் என்று அவர்களாக சுயமதிப்பீடு செய்து செயல்படவில்லை. அல்லாஹ் அறிவித்தவற்றை ஒரு சின்னஞ்சிறிய விஷயத்தையும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பதில் அவர்கள் சிறிதும் குறைவு செய்யவில்லை. அது விஷயத்தில் அல்லாஹ்வின் எச்சரிக்கைகள் மிகமிகக் கடுமையாக இருக்கின்றன. அவை வருமாறு:

يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللّهَ لاَ يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ

தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக மாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கிலி)ருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.

وَإِن كَادُواْ لَيَفْتِنُونَكَ عَنِ الَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ لِتفْتَرِيَ عَلَيْنَا غَيْرَهُ وَإِذًا لاَّتَّخَذُوكَ خَلِيلاً وَلَوْلاَ أَن ثَبَّتْنَاكَ لَقَدْ كِدتَّ تَرْكَنُ إِلَيْهِمْ شَيْئًا قَلِيلاً إِذاً لَّأَذَقْنَاكَ ضِعْفَ الْحَيَاةِ وَضِعْفَ الْمَمَاتِ ثُمَّ لاَ تَجِدُ لَكَ عَلَيْنَا نَصِيرًا

(நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டி கூறும்படி உம்மைத் திருப்பிவிடவே அவர்கள் முனைந்தார்கள்; (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை தம் உற்ற நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

மேலும், நாம் உம்மை உறுதிப்படுத்தி வைத்திருக்கவில்லையெனின் நீர் கொஞ்சம் அவர்கள் பக்கம் சாய்ந்து போயிருத்தல்கூடும்.

(அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ்வாழ்நாளில் இரு மடங்கு (வேதனையும்) மரணத்தில் இரு மடங்கு (வேதனையும்) நுகருமாறு நம் செய்திருப்போம்; பின்பு, நமக்கு எதிராக உமக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர்.(17:73,74,75)

وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَاجِزِينَ

அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக்கட்டி கூறியிருப்பாரானல்

அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக்கொண்டு

பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்

அன்றியும், உங்களில் எவரும் அதைத் தடுப்பவர்களில்லை. (69:44-47)

அல்லாஹ்வின் இறுதித் தூதருக்கே இந்த எச்சரிக்கைகள்; எங்களுக்கில்லை; எனவே நாங்கள் எங்களது சுய விருப்பப்படி கூட்டிக் குறைத்து மார்க்கம் பிரச்சாரம் செய்யலாம்; அதற்கு தடை இல்லை என்றும் இந்த மார்க்க அறிஞர்கள் கூற முடியாது. அது குறித்து குர்ஆனின் எச்சரிக்கைகள் வறுமாறு:

لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيراً

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.(33:21)

قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللّهُ غَفُورٌ رَّحِيمٌ

(நபியே!) நீர் கூறும்; “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னை பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருனை உடையவனாகவும் இருக்கின்றான். (3:31)

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا

மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றி கட்டளையிட்டு விட்டால், அவர்களுடை அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (33:36)

يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَا وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءنَا فَأَضَلُّونَا السَّبِيلَا رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே;  இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள்.

“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள்.

“எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக” (என்பர்) (33:66,67,68)

اتَّبِعُواْ مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلاَ تَتَّبِعُواْ مِن دُونِهِ أَوْلِيَاء قَلِيلاً مَّا تَذَكَّرُونَ

(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கிக் கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள். (7:3)

இவ்வளவு தெளிவான, கடுமையான எச்சரிக்கைகள் உள்ளங்கை நெல்லிக்கனிபோல், குன்றி விட்ட தீபம்போல் இருந்தும் இன்றைய மார்க்க அறிஞர்கள் எந்த மயக்கத்தில் மத்ஹபுகளையும், தரீக்காக்களையும், தர்காக்களையும் ஆதரிக்கிறார்கள்? பெரும்பான்மையான முஸ்லிம்கள் இந்த மத்ஹபு, தரீக்கா, தர்கா மோகத்தில் சிக்கி இருக்கிறார்கள்; அவற்றை எதிர்த்து சத்தியத்தைச் சொன்னால் பெரும் மேதகளாக நம்மை மதித்துக் கொண்டிருக்கும் அவர்கள் நம்மைத் தூக்கி எறிந்து விடுவார்கள் என்ற அச்சத்தால் அறிந்துள்ள சத்தியத்தை மறைக்கிறார்களா?

الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْرِفُونَهُ كَمَا يَعْرِفُونَ أَبْنَاءهُمْ وَإِنَّ فَرِيقاً مِّنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ

எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்; ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்துகொண்டே உண்மையை மறைக்கின்றனர். (2:146)

என்று அல்லாஹ் வேதத்துடைய அறிஞர்களை அடையாளம் காட்டுவது மத்ஹபுகளையும், தரீக்காகளையும், தர்ஹாக்களையும் சரிகண்டு நியாயப்படுத்தும் முஸ்லிம் அறிஞர்களுக்கும் ஏன் பொருந்தாது? மார்க்க அறிஞர்களே! இறைத்தூதர்கள் அல்லாஹ்வுக்கு எவ்வாறு அஞ்சி உண்மையை மறைக்காமல் மக்களிடம் அல்லாஹ்வின் கட்டளையை எடுத்துரைத்தார்களோ அவ்வாறு உண்மை மார்க்கத்தை மார்க்க அறிஞர்கள் சத்தியத்தை எடுத்துரைக்க முன்வரவேண்டும்.

Leave a Comment

Previous post:

Next post: