ரகசிய ஞானம்?

in மூடநம்பிக்கை

சில ரகசிய ஞானத்தை, சிலருக்கு மட்டும் நபிصلى الله عليه وسلم அவர்கள் கற்றுக்கொடுத்தாக ஹதீஸ் உள்ளதாக முரீது கொடுப்போர் கூறுகின்றனர். உண்மைதானா? சமீபகாலமாக முரீது கொடுப்போர் ரகசிய ஞானம் என்று கூறிப் பாமர மக்களை ஏமாற்றுவது அதிகரித்துள்ளது.  அதனால் இது பற்றிக் கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.

நான்  நபிصلى الله عليه وسلم  அவர்களிடமிருந்து இரண்டு  (கல்விப்)பைகளை  அறிந்தேன்.  அதில்  ஒன்றை  (மக்கள் மத்தியில்) வெளிப்படுத்திவிட்டேன். இன்னொன்றை மக்கள் மத்தியில் நான் வெளிப்படுத்திவிட்டால் எனது குரல் வலை  வெட்டப்பட்டுவிடும் என்று அபூஹுறைரா

رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறினார்கள்(புகாரி)

புஹாரியில் இடம் பெற்றுள்ள இந்த    ஹதீஸை     அடிப்படையாகக் கொண்டு    ரகசிய  ஞானம் என்று ஒன்று உள்ளதாகக் கூறுகின்றனர்.இந்த ஹதீஸை  மட்டும் மேலோட்டமாகக் கவனிக்கும்போது அவர்களின் முடிவு  சரியானதென்று சிலருக்குத் தோன்றலாம்.

என்னிடமிருந்து  (பெற்ற) சிறு வசனமாக இருந்தாலும், பிறருக்கு சொல்லி  விடுங்கள்.(புகாரி) இது நபிமொழி.  நபிصلى الله عليه وسلم அவர்களிடமிருந்து  கற்ற  மார்க்கம்  சம்பந்தப்பட்ட  எந்த  ஒரு  விஷயத்தையும் மறைக்காது பிறருக்கு எடுத்துச் சொல்லும்படி கட்டளை இடப்பட்டிருக்கும்போது, அதற்கு மாற்றமாக அபூஹுரைரா

رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் மார்க்கத்தின் ஒரு பகுதியை மக்களிடம் சொல்லாமல் எப்படி மறைத்திருப்பார்கள்?

எவன் ஒருவன் தான் கற்ற கல்வியை மறைக்கிறானோ, அவனுக்கு  நெருப்புக் கடிவாளம் போடப்படும் என்று நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறிய ஹதீஸ், அஹ்மத், திர்மிதீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்வியை மறைப்பது பயங்கரமான குற்றம் என்று இந்த ஹதீஸ் உணர்த்தப்படுகின்றது. இந்த ஹதீஸை அபூஹுரைரா

رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களே அறிவிக்கின்றார்கள். கல்வியை மறைப்பது கடுங்குற்றம் என்பதை நன்றாகவே அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் உணர்ந்தே வைத்திருந்தனர், என்பதும் இதிலுருந்து தெளிவாகின்றது. மார்க்கம் சம்மந்தப்பட்ட ஒரு பகுதியை நிச்சயம் அவர்கள் மறைத்திருக்க மட்டார்கள் என்று எவரும் உணரலாம்.

கல்வியில் ஒரு  பகுதியை  மறைக்க  அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ  அவர்கள்  அஞ்சியிருக்கின்றனர். அதை அவர்களே  பின் வருமாறு  கூறவும்   செய்கின்றனர்.   இந்த  வேதத்தில்  மக்களுக்காக  நாம்  தெளிவாக்கிய பின்னரும் நாம் இறக்கியருளிய தெளிவான வசனங்களையும், நேர்வழியையும் யார் மறைக்கின்றார்களோ, அவர்களை அல்லாஹ் சபிக்கின்றான். சபிப்பவர்களும் சபிக்கின்றார்கள் என்று தொடங்கக்கூடிய இரண்டு குர்ஆன் வசனங்கள் இல்லாவிட்டால், நான் எந்த ஒரு ஹதீஸையும் அறிவித்திருக்க மாட்டேன். என்று அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ

அவர்கள்  கூறுகிறார்கள்.(புகாரி)

மார்க்கத்தின் எந்த ஒரு பகுதியையும் மறைக்க கூடாது என்பதை  உணர்ந்து வைத்துள்ள அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ

அவர்கள் நிச்சயம் மார்க்கத்தை மறைத்திருக்க மாட்டார்கள் என்று உணரலாம்.

நான் ஒரு பகுதியை சொல்லவில்லை என்று அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ

அவர்கள் கூறியது நிச்சயமாக மார்க்க சம்பந்தப்பட்ட விஷயங்களாக இருக்க முடியாது. ஏனெனில் மார்க்க சம்மந்தப்பட்ட எதனையும் மறைக்கக்கூடாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கின்றது. அப்படியானால் அவர்கள் மறைத்த விபரங்கள் என்ன?

பிற்காலத்தில் கொடுங்கோல் ஆட்சி நடத்தகூடிய மன்னர்கள்  அவர்களின் காலம், போன்றவைகளை முன்னறிவுப்பாக நபி صلى الله عليه وسلم  அவர்கள்  அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுக்குச் சொல்லி     இருந்தனர். அவற்றை வெளிப்படுத்தினால், ஆட்சியாளர்களால் தமக்கு ஆபத்து நேரலாம் என்பதற்காக  அவற்றை அபூஹுரைரா

رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள்  மக்களிடம் கூறவில்லை. யா அல்லாஹ்! ஹிஜ்ரி 60 ஆம் ஆண்டின் துவக்கத்தை  விட்டும், சிருவர்களின்  ஆட்சிக்காலத்தை  விட்டும்   உன்னிடம்  பாதுகாப்பு   தேடுகிறேன்  என்று  அவர்கள்  அடிக்கடி பிரார்த்தனை செய்து வந்தது இதற்கு போதுமான ஆதாரமாகும். இதிலிருந்து அவர்கள் மக்கள் மத்தியில் வைக்காது மறைத்தது மார்க்க சம்பந்தப்பட்டது அல்ல என்று உணரமுடியும் (பத்ஹுல்பாரி)

ரகசிய ஞானத்தை அவர்கள் மறைத்து வைத்து இருந்தார்கள்  என்று கருத இந்த ஹதீஸில் எவ்வித ஆதாரமும் இல்லை. ஒரு வாதத்துக்காக ரகசிய ஞானத்தைத் தான் மறைத்தார்கள் என்று ஏற்றுக் கொண்டாலும் முரீது வியாபாரிகளுக்கு இதில் ஆதாரம் எதுவுமில்லை.

அவர்கள் கருத்துப்படி நபி صلى الله عليه وسلم அவர்கள் அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ     அவர்களுக்கு ரகசிய ஞானத்தைத் கற்றுக் கொடுத்திருந்தனர் என்று வைத்துக்கொண்டால் அந்த ரகசிய ஞானத்தை அபூஹுரைரா

رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் எவரிடமும் சொல்லாமல் மறைத்துவிட்ட அந்த  ரகசியம் ஞானம் முரீது வியாபாரிகளுக்கு எப்படித் தெரிந்தது? அவர்கள் தான் யாரிடமும் கூறாமல் சென்று விட்டார்களே!

ரகசிய ஞானம் இருப்பதாக வைத்துக் கொண்டால்      அது அபூஹுரரா رَضِيَ اللَّهُ عَنْهُ

    அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.அவர்கள் எவரிடமும்  சொல்லாமல் மறைத்து விட்டுச் சென்று விட்ட நிலையில் வேறு  எவருக்கும் அது தெரிவதற்கு எவ்வித முகாந்திரமுமில்லை.

அலிرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுக்கு மட்டும் நபி صلى الله عليه وسلم அவர்கள் ரகசிய ஞானம் கற்றுக் கொடுத்திருந்தனர், அவர்கள் வழியாக தொடர்ந்து அந்த  ரகசிய ஞானம் ஷேக்குகளுக்குத் தெரிவிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது என்பது ரகசிய ஞானக்காரர்களின் இரண்டாவது ஆதாரம். மனிதர்களை வழி கெடுப்பதற்காக என்றே இஸ்லாத்தில் திட்டமிட்டு நுழைக்கப்பட்ட அத்தனை தரீக்காக்களும், அலி

رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கலிடம் போய் முடிவடைகின்றன. என்று தரீக்கா வாதிகள் ஒரே குரலில் சொல்லி வருகின்றனர். இது முழுக்க முழுக்க ஷியாக்களின் கொள்கை. இன்று மட்டுமல்ல அலிرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே அவர்கள் பெயரால் இப்படிக் கூறப்பட்டது. அதை அலிرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களே மறுத்தும் விடுகின்றார்கள்.

குர்ஆனில் இல்லாத (விஷேச)   ஞானம் எதுவும் உங்களிடம் உண்டோ?    என்று நான் அலி رَضِيَ اللَّهُ عَنْهُ   அவர்களிடம் கேட்டேன்.   அதற்கு அவர்கள்  அல்லாஹ்வின்     வேதத்தை விளங்குவதில் ஒரு    மனிதனுக்கு கொடுக்கப்படுகின்ற ஞானத்தைத் தவிர வேறு எதுவும் அல்லாஹ்வின் மீது ஆணையாக எங்களிடமில்லை. இதோ(என் கையில்) உள்ள இந்த ஏட்டின் உள்ளவற்றையும் தவிர வேறு எதுவுமில்லை,என்று கூறினார்கள். ஏட்டில் உள்ளது என்னவென்று நான் கேட்டபோது அதையும் சொல்லிவிட்டார்கள். நஷ்ட ஈடு பற்றிய சட்டங்கள், கைதிகளை விடுதலை செய்வது போன்ற சட்டங்கள் இவைதான் அந்த ஏட்டில் உள்ளவை என்றும் கூறிவிட்டார்கள் (அறிவிப்பவர்:அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ

புகாரி)

அலிرَضِيَ اللَّهُ عَنْهُ

  அவர்களே  தன்னிடம் ரகசிய ஞானம் எதுவுமில்லை என்று  திட்டவட்டமாக மறுத்து விட்டனர். இதன் பின்னரும் ரகசிய ஞானம் உள்ளது என்று கூறி ஷேக்குகள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

முனாபிக்களின் பெயர் பட்டியலை ஹுதைபதுல் யமானرَضِيَ اللَّهُ عَنْهُ    அவர்களுக்கு நபிصلى الله عليه وسلم

அவர்கள் அறிவித்துக் கொடுத்திருந்தனர். அதை ரகசியமாக வைத்துக்கொள்ளும் படியும் கூறி இருந்தனர்.

இது போன்ற  பிரச்சனைகளில்  சிலவற்றைத் தான்  சிலரிடம்  ரகசியமாக  சொல்லி  இருந்தனர்.  இவர்கள் நினைப்பது போல் ரகசிய ஞானம் என்று எதனையும் சிலருக்கு மட்டும் குறிப்பாகச் சொல்லித்தரவில்லை. மக்களை ஆட்டு மந்தைகளாகக் கருதிக் கொண்டு தங்களுக்கு மட்டுமே எல்லாம் விளங்கும் என்று அகந்தை  கொண்ட போலிகளின் பேச்சில் ஏமாற வேண்டாம்.


அந்நஜாத்

 

Comments on this entry are closed.

Previous post:

Next post: