
அல்-குர் ஆன். 6:7 சொல்லும் மனித உளவியலும், அற்புதமும்!
— எஸ்.ஹலரத் அலி
(+91 99653 61068.)
முன்னுரை: ஒரு சவால்!
மக்கத்து காஃபிர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சவால் விட்டார்கள்:
“வானத்திலிருந்து எங்களுக்கு ஒரு புத்தகத்தை இறக்குங்கள். அப்போதுதான் நம்புவோம்!”
— அல் குர் ஆன்.17:93.
அல்லாஹ் அதற்கு பதிலளிக்கிறான்:
وَلَوْ نَزَّلْنَا عَلَيْكَ كِتَابًا فِي قِرْطَاسٍ فَلَمَسُوهُ بِأَيْدِيهِمْ لَقَالَ الَّذِينَ كَفَرُوا إِنْ هَذَا إِلَّا سِحْرٌ مُّبِينٌ 6:7
“நாம் உமக்கு காகிதத்தில் எழுதப்பட்ட ஒரு வேதத்தை இறக்கி, அதை அவர்கள் கைகளால் தொட்டுப் பார்தாலும், நிராகரிப்போர்: ‘இது தெளிவான சூனியம்’ என்று கூறுவார்கள்!”
ஏன் “காகிதம்”? அந்த காலத்தில் காகிதம் எங்கே இருந்தது?
இதுதான் இந்த வசனத்தின் அற்புதம்.
பகுதி 1: அந்த காலத்தின் யதார்த்தம்!
வஹி இறங்கிய போது அரேபியர்கள் எதில் எழுதினார்கள்?
- ரக்க் – பதனிட்ட தோல்.
- அக்தாம் – விலங்கின் தோள்பட்டை எலும்பு.
- அல்-அஸ்ப் – ஈச்ச ஓலை.
- அல்-ஹிஜாரா – கல் பலகை.
ஆனால் வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான் “கிர்தாஸ் قِرْطَاسٍ” – காகிதம்.
“கிர்தாஸ்” என்பது கிரேக்க “Chartes” லிருந்து வந்த இறக்குமதி சொல்.ஜாஹிலியா கால அரபிக் கவிஞர் உமய்யா பின் அபி ஸல்த் கூட இதை பயன்படுத்தியுள்ளார்.
ஆனால் அது சாதாரண மனிதனுக்கு எட்டாத, விலை உயர்ந்த “அதிசய பொருள்”.
பகுதி 2: மூன்று காரணங்கள் – ஏன் காகிதம்?
- சாக்கு போக்கை உடைக்க..
“எங்களுக்கு புத்தகம் வேண்டும்” என்று கேட்டார்கள். சரி,
உலகத்திலேயே மிக சுத்தமான, மிக அழகான “காகித புத்தகத்தையே” கொடுத்தாலும் கூட நீங்கள் “சூனியம்” என்று சொல்லி தப்பிப்பீர்கள். பிரச்சனை சான்றில் இல்லை. உங்கள் வீம்பில் தான்!
- மனித உளவியலின் உண்மை!
இது காலத்தை கடந்த உளவியல். சான்று எவ்வளவு தெளிவாக, கைகளால் தொடும் அளவுக்கு இருந்தாலும், ஈமான் இல்லாத உள்ளம் மறுக்க ஒரு காரணத்தை தேடும்.
இன்றும் அப்படித்தானே? குர்ஆன் App ஆக கையில் இருந்தும் மறுக்கிறோமே!
- எதிர்கால முன்னறிவிப்பு!
1400 வருடங்களுக்கு முன் அரிதாக இருந்த “காகிதத்தை” அல்லாஹ் பெயர் சொல்லி குறிப்பிட்டான்.
இன்று உலகம் முழுக்க காகிதம், பிரிண்டிங், PDF. ஆனாலும் மறுப்பு தொடர்கிறது. வசனம் 100% உண்மையாகிவிட்டது.
பகுதி 3: “விரிக்கப்பட்ட ஏடு” உடனான தொடர்பு:
அல் குர் ஆன்.
52:3 ல் அல்லாஹ் “فِي رَقٍّ مَّنشُورٍ – விரிக்கப்பட்ட தோலேட்டின்” மீது சத்தியம் செய்கிறான்.
அன்று “ரக்” – தோலேடு.
இன்று “கிர்தாஸ்” – காகித ஏடு.
நாளை “டிஜிட்டல்” – திரை ஏடு.
பொருள் மாறலாம். ஆனால்..
“மன்ஷூர் – விரித்து வைக்கப்பட்டு, ஓதப்பட வேண்டியது”
என்ற கட்டளை மாறவில்லை.
நிறைவுரை: பாடம் என்ன?
அல் குர் ஆன்.6:7 வசனம் நமக்கு இரண்டு பாடம் தருகிறது:
- ஹிதாயத் என்பது பொருளில் இல்லை. உள்ளத்தில் உள்ளது.
தோலில் எழுதினாலும், காகிதத்தில் எழுதினாலும், ஏற்கும் இதயம் வேண்டும். - குர்ஆன் அல்லாஹ்வின் கலாம் என்பதற்கு இதுவே சான்று. எழுத படிக்க தெரியாத ஒருவர், அந்த காலத்தில் இல்லாத “காகிதம்” பற்றி எப்படி பேச முடியும்? மேலும் 1400 வருடம் கழித்து நடக்கப்போவதை எப்படி சொல்ல முடியும்?
فَإِنَّهَا لَا تَعْمَى الْأَبْصَارُ وَلَٰكِن تَعْمَى الْقُلُوبُ 22:46
“நிச்சயமாக கண்கள் குருடாவதில்லை. நெஞ்சங்களிலுள்ள உள்ளங்கள்தாம் குருடாகின்றன”
அல்லாஹ் நம் உள்ளங்களை ஒளிர செய்வானாக. ஆமீன்!