பிறவியிலேயே படிப்பறிவு மூளையுடன் பிறக்கும் குழந்தைகள்

பிறவியிலேயே படிப்பறிவு மூளையுடன் பிறக்கும் குழந்தைகள்
( HUMANS ARE BORN WITH BRAINS “ PRE WIRED “ TO SEE WORDS.)

– எஸ்.ஹலரத் அலி,  திருச்சி-7
(+91- 9965361068)

ஆதி மனிதன் குரங்கு இனத்தில் இருந்து பிறந்து….. பின் பரிணாம வளர்ச்சிப்படி படிப்படியாக மனிதனாகி பேசக்கற்றுக்கொண்டு மொழிகளை உருவாக்கினான் என்றே இன்றைய அறிவியல் உலகம் நம்பிக்கொண்டு வருகிறது.ஆனால் இயற்கை மார்க்கம் இஸ்லாம் இதை வன்மையாக மறுக்கிறது. முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் மண்ணிலிருந்து மனிதனாகப்படைக்கப்பட்டார்கள். இவரிலிருந்தே இவரின் துணைவியாக ஹவ்வா (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்.இந்த ஒரு ஆண் பெண் ஜோடிகளிலிருந்தே அனைத்து மக்களும் படைக்கப்பட்டார்கள்.

மனிதர்களுக்கு அறிவாற்றலை கற்றுக்கொள்ள உதவும் எழுதுகோலை அல்லாஹ் மனிதர்களுக்கு முன்பே படைத்து விட்டான்.

முன்பே, படைப்பினங்களின் விதியை எழுதி விட்டான். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். – ஸஹிஹ் முஸ்லிம்.5160.

“அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக்கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையே எல்லாம் அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படிப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு அவனுக்குக் கற்பித்தான்.” .- அல்குர்ஆன். 96;1-5.

இறைவனால் கற்றுக்கொடுக்கப்பட்ட ஆதம் (அலை) அவர்கள் படிப்பறிவு, எழுத்தறிவு மூளையுடன்தான் பூமிக்கு வந்தார்கள். இப்படி முதல் மனிதரின் படிக்கும் அறிவானது அவரது சந்ததிகளுக்கும் தொடர்ந்து மரபணு போல் கடத்தப்பட்டு வருகிறது. உயிரினங்களிலேயே மனித இனத்திற்கு மட்டும் அல்லாஹ் இந்த சிறப்பான கண்ணியத்தை கொடுத்து, பகுத்தறிவு இயற்கை மார்க்கத்தில் மனிதன் பயணப்பட விரும்புகிறான். இதனையே நபி (ஸல்) அவர்கள் இப்படிக்கூறுகிறார்கள்.

எல்லாக் குழந்தைகளுமே இயற்கையி(ன் மார்க்கத்தி)ல் தான் பிறக்கின்றன. அவர்களின் பெற்றோர்கள் தாம் அவர்களை இயற்கை மார்க்கத்தை விட்டு திருப்பி யூதர்களாகவோ கிருஸ்தவர்களாகவோ ஆக்கி விடுகின்றனர்.  புஹாரி.6599,6600.

எந்த ஒரு குழந்தையும் பரிணாம வளர்ச்சி எனும் மூடக் கொள்கைப்படி குரங்கிலிருந்து வந்ததல்ல… மாறாக எழுதப், படிக்க உதவும் அறிவுடன் கூடிய மூளையுடன் இயற்கை மார்க்கத்தில்தான் பிறக்கின்றது. இந்த உண்மையை இன்றைய அறிவியல் உலகம் ஆய்வு செய்து அறிவித்துள்ளது. அமெரிக்காவின் ஓஹியோ மாநில பல்கலைக்கழக ஆய்வாளர்கள், பிறந்த குழந்தைகள் நாற்பது பேரின் மூளைகளின் அமைப்பை ஸ்கேன் செய்து ஆய்வு செய்தனர். இது போல் வயது முதிர்ந்த நாற்பது பேரின் மூளைகளை ஸ்கேன் செய்து அதன் அமைப்பை ஆய்வு செய்தனர்.

பெரியவர்களின் அறிவு, அனுபவ கல்வி வளர்ச்சிக்கு தக்கவாறு அவர்களின் மூளை அமைப்பு இருப்பது போலவே பிறந்த குழந்தைகளின் மூளை அமைப்பு இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். இதன் மூலம் பிறக்கும் போதே எண்களையும்,எழுத்துக்களையும் அடையாளம் கண்டு  படிக்கும் திறனுடந்தான் குழந்தைகள் பிறப்பதை அறிந்து கொண்டனர். அதற்கான வழிகாட்டல் குழந்தையின் மூளையில் பதிவு செய்யப்பட்டே பிறக்கிறது. இந்த விஷேச ஏற்பாடு வாய் பேச குரங்குகளுக்கு கிடையாது. ஒரு குழந்தையின் மூதாதை மனிதனாக மட்டுமே இருக்க முடியுமே தவிர குரங்காக ஒரு போதும் இருக்க முடியாது என்பதை அறிவியல் ஆய்வுகள் மெய்ப்பிக்கிறது. (22 – October.2020. Journal Nature.com)

https://news.osu.edu/humans-are-born-with-brains-prewired-to-see-words/
https://www.theweek.in/news/sci-tech/2020/10/23/newborns-have-brains-prewired-to-see-words.html ,

எழுத்துக்கள், சொற்களை படிப்பதற்குரிய மொழி ஆற்றல் பிறவியிலேயே குழந்தையின் மூளையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனித மூளையின் ஒரு பகுதியில் எழுத்துக்களை சொற்களை உணர்ந்து கொள்ளும் வழி காட்டுதல் இருக்கிறது. இதை “VISUAL WORD FORM AREA “ (VWFA) என்று அழைக்கிறார்கள். இது மூளையின் கட்டுப்பாட்டில் (Brain language Network) இணைக்கப்பட்டுள்ளது. புதியதாய் பிறந்த குழந்தையின் மூளையை ஸ்கேன் (fMRI Scan) செய்து இவ்வுண்மையை கண்டறிந்துள்ளார்கள்.

பொதுவாக இதுநாள் வரை….VFWA எனும் எண்களையும்,எழுத்துக்களையும் அடையாளம் காணும் மூளையின் ஒரு பகுதியானது, கற்றறிந்த மனிதர்களுக்கு மாத்திரம் அமைந்திருக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் தற்போதைய புதிய ஆய்வில் சொற்களை அடையாளம் காணும் VFWA அமைப்பானது பிறந்த குழந்தையிலேயே இயற்கையாக இருப்பது என்பதை கண்டறிந்துள்ளார்கள் மனிதன் கல்வி அறிவு பெற வேண்டும் என்ற அமைப்புடனே அல்லாஹ் மனிதனைப் படைத்துள்ளான். ஆகவேதான் மனித சமுதாயத்திற்கு வழிகாட்ட வந்த குர்ஆன் “ ஓதுவீராக!” என்ற முதல் வசனத்தை கொண்டே இறக்கப்பட்டுள்ளது.

மொழி வழி சொற்களை அடையாளம் காணும் அமைப்பினை மூளையில் ஏற்படுத்திய பின்பே அல்லாஹ் “ ஓதுவீராக!” என்ற வசனத்தை (அல் குர்ஆன்.96:1) முதலில் இறக்கி வைத்தான். ஆகவேதான் மனிதர்களையும் மிருகங்களையும் வேறுபடுத்துவது கல்வியறிவு எனும் உண்மையை அல்லாஹ் தெளிவாக குர்ஆனில் கூறியுள்ளான். கல்வியறிவு இல்லாமல் சிந்திக்க தெரியாத மனிதனை கால்நடைகள் என்று அல்லாஹ் கூறுவதும் சிந்திக்க வேண்டிய ஒன்று.

நிச்சயமாக, மனிதர்களிலும், ஜின்களிலும் பலரை நரகத்திற்காகவே நாம் படித்திருக்கின்றோம். (அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களுக்கு உள்ளங்கள் இருக்கின்றன; எனினும் அவற்றைக் கொண்டு நல்லுபதேசங்களை அவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டர்கள்.  அவர்களுக்கு கண்களுமுண்டு; எனினும், அவற்றைக் கொண்டு இவ்வுலகிலுள்ள இறைவனின் அத்தாட்சிகளைப் அவர்கள் பார்க்க மாட்டார்கள்.

அவர்களுக்கு செவிகளுமுண்டு; எனினும் அவற்றைக்கொண்டு அவர்கள் நல்லுபதேசங்களுக்கு செவிசாய்க்க மாட்டார்கள். இத்தகையவர்கள் மிருகங்களைப் போல் அல்லது அவற்றைவிட அதிகமாக வழி கெட்டவர்களாகவே இருக்கின்றனர். இத்தகையவர்கள்தான் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவர். -அல் குர்ஆன். 7:179.

இவர்களிடம் கேளும்: அறிந்தோரும் அறியாதோரும் சமமாக முடியுமா? அறிவுடையவர்கள்தாம் நல்லுரைகளை ஏற்கின்றார்கள்.  அல் குர்ஆன்.39:9.

என்னும் எழுத்தும் கண்ணெனத் தகும் – .என்று ஔவையாரும்,

எண் என்ப ஏனை எழுத்தென்ப இரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு.

என திருவள்ளுவரும் எண், எழுத்துக்களின் முக்கியத்துவத்தை தங்கள் பாடல்களில் குறித்துக் காட்டியுள்ளனர். இவ்விரண்டின் அவசியத்தை அறிந்த அல்லாஹ், மனிதனைப் படைக்கும் போதே அவனது மூளையில் எழுத்தறிகின்ற ஆற்றலை சேர்த்தே படைத்து விட்டான். ஆகவேதான் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் எண், எழுத்துக்களை அறிந்து கொள்ளும் அறிவுடனே பிறக்கின்றன. இவ்வுண்மைகளை இன்றைய நவீன அறிவியல் ஆய்வாளர்கள் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *