ஸலஃப், ஸலஃபுக் கொள்கை என்றால் என்ன?

Post image for ஸலஃப், ஸலஃபுக் கொள்கை என்றால் என்ன?

in பொதுவானவை

ஸலஃப் என்னும் இந்த வார்த்தையை வைத்துக் கொண்டு மக்களைப் பலர் நிறையவே குழப்பி வருகிறார்கள்.

அகராதியில் ஸலஃப் எனும் சொல்லுக்கு முன்னோர்கள் என்பது பொருள். நம்முடைய தந்தையின் காலத்தைச் சேர்ந்தவர்கள் முதல் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வரை வாழ்ந்த அனைவருமே அகராதிப்படி ஸலஃபுகள் ஆவார்கள். நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் கூட இறந்தால் ஸலஃப்களாக ஆகிவிடுவோம்.

குர்ஆனிலோ, நபி மொழியிலோ ஸலஃபுக் கொள்கை என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.

வரலாற்று ரீதியாக குறிப்பிட்ட ஒரு பிரச்சனையில் முஸ்லிம் சமுதாயத்தில் பிளவு ஏற்பட்ட போது தான் ஸலஃபுக் கொள்கை என்பது உருவாகியது.

அல்லாஹ் தன்னைப் பற்றி பேசும் போது தனது ஆற்றலைப் பற்றியும் பேசுகிறான். தனது தோற்றத்தைப் பற்றியும் பேசுகிறான்.

ஆற்றலைப் பற்றிப் பேசும் வசனங்களில் கருத்து வேறுபாடு ஏற்படவில்லை. ஆனால் தனது தோற்றத்தைப் பற்றி பேசும் வசனங்களில் எனது கை, எனது முகம் போன்ற சொற்களை அல்லாஹ் பயன்படுத்துகிறான். அல்லாஹ்வின் கை என்றால் கை என்றே நபித்தோழர்கள் காலத்தில் புரிந்து கொள்ளப்பட்டது. கை என்றால் அல்லாஹ்வின் ஆற்றல் என்று கருத்து கொடுக்கப்படவில்லை. நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களும் இவ்வாறே பொருள் கொண்டனர். ஆனால் தபஃ தாஃபியீன்கள் காலத்தில் நேரடி அர்த்தம் கொள்ளாமல் இது போன்ற சொற்களுக்கு வேறு கருத்தை சில அறிஞர்கள் கொடுக்கலானார்கள். அப்போது தான் அஹ்மத் பின் ஹம்பல் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி நம்முடைய ஸலஃபுகள் அதாவது சஹாபாக்கள், தாஃபியீன்கள் எவ்வாறு புரிந்து கொண்டார்களோ அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று முதன் முதலில் ஸலஃப் என்பதைக் கொள்கையுடன் தொடர்பு படுத்தி பயன்படுத்தினார்கள்.

இதன் பிறகு தான் யார் நபித்தோழர்கள் அல்லாஹ்வைப் புரிந்து கொண்டது போல் புரிந்து கொண்டார்களோ அவர்கள் ஸலஃபுகள் என்று குறிப்பிடப்பட்டனர்.

இறைவன் தனக்கு எந்தத் தன்மைகள் இருப்பதாக கூறுகின்றானோ அவற்றுக்கு நாம் மாற்று விளக்கம் கொடுக்காமல் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். இறைவன் தனக்கு இருப்பதாகக் கூறிய எந்த அம்சத்தையும் மறுத்துவிடக் கூடாது என்பதே நபித்தோழர்களின் நம்பிக்கை.

இறைவனுக்கு கை,கால், முகம் ஆகிய உறுப்புகள் இருப்பதாகவும், உருவம் இருப்பதாகவும் குர்ஆன் கூறுகின்றது. இறைவன் அர்ஷின் மீது அமர்ந்திருக்கின்றான் எனவும், அவன் பார்க்கின்றான், கேட்கின்றான் எனவும், அவன் நடந்து வருவான் எனவும், மறுமையில் இறைவனை நல்லடியார்கள் காண்பார்கள் எனவும் குர்ஆன் கூறுகின்றது.

இவ்விடயங்கள் அனைத்தையும் அப்படியே நம்பிக்கை கொள்ள வேண்டும். இவற்றுக்கு மாற்று விளக்கம் கொடுப்பதோ, இவை எப்படி இருக்கும் என்று கற்பிப்பதோ கூடாது என்பதே ஸஹாபாக்களின் நம்பிக்கை.

ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை எனது கையால் படைத்தேன் என்று அல்லாஹ் சொல்வது, கையால் படைத்தான் என்ற அர்த்த்தில் தான் புரிந்து கொள்ள வேண்டும் என்பது ஸஹாபாக்களின் நம்பிக்கை/ எனது வலிமையைக் கொண்டு படைத்தோம் என்றே அர்த்தம் செய்ய வேண்டும் என்று பிற்காலத்தவர்கள் விளக்கம் கூறினார்கள்.
(இவ்வாறு வியாக்கியானம் செய்தவர்களை வரலாற்றில் ஹலஃப் என்று கூறப்படுகின்றனர்)

இவ்வாறு அல்லாஹ்வுடைய பண்புகளில் தன்மைகளில் அல்லாஹ்வுடைய உருவம் சம்பந்தப்பட்டதாக வரும் விஷயங்களில் வியாக்கியானம் கொடுத்து வந்தனர்.

ஸலஃபுகள் – அதாவது ஸஹாபாக்கள் கண் என்றால் கண் என்றும், காது என்றால் காது என்றும் வேறு வியாக்கியானம் செய்யாமல் எழுதிக் கொண்டார்கள். அல்லாஹ்வின் உறுப்புகள் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்வதும், அதற்கு விதம் கற்பிப்பதும் கூடாது. மறுமையில் அவனை காணும் போதே இந்த விபரங்கள் புலப்படும் என்று கூறி விட்டார்கள். இது தான் ஸலஃப் கொள்கையாகும்.

ஆனால் பின்னால் வந்த தாபியீன்களில் சிலர் இதற்கு மாற்றமாக அல்லாஹ்வின் முகம் என்றால் திருப்தி என்றும், கை என்றால் சக்தி என்றும், அர்ஷ் என்றால் அதிகாரம் என்றும் வியாக்கியானம் செய்தனர். இது ஹலஃபுகளின் அதாவது பின்வந்தவர்களின் கொள்கையாகும்.

இந்த விஷயத்தில் ஸஹாபாக்கள் எடுத்த முடிவே சரியானது. இதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆக ஸலஃப், ஹலஃப் என்கிற இந்த வார்த்தைகள் அல்லாஹ்வுடைய தோற்றம் பற்றிய விஷயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் உருவானதே தவிர இன்று பலரும் சொல்லி வருவது போல் எல்லா விஷயங்களிலும் ஸஹாபாக்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதைக் குறிப்பது அல்ல.

ஸஹாபாக்கள் மார்க்கம் தொடர்பாக எதைக் கூறினாலும் எந்த விளக்கம் அளித்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் ஸலஃப் கொள்கை என்று தவறான தோற்றத்தை இன்றைக்கு சமுதாயத்தில் சிலர் ஏற்படுத்துகின்றனர். சுருங்கச் சொல்வதென்றால் ஸஹாபாக்களைப் பின்பற்றுவது தான் ஸலஃபுக் கொள்கை என்று கூறுகின்றனர்.

பின்வரும் மக்கள் எங்களைத் தான் பின்பற்ற வேண்டும் என எந்த நபித்தோழரும் கூறவில்லை. ஏனைய நபித்தோழர்களைப் பின்பற்றுமாறும் நபித்தோழர்கள் கூறவில்லை. ஏன் ஒரு நபித்தோழர் இன்னொரு நபித்தோழரைப் பின்பற்றவில்லை. மாறாக அவர்கள் அனைவரும் வஹி ஆகிய குர்ஆன் ஹதீஸ் இரண்டை மட்டுமே பின்பற்றச் சொன்னார்கள்.

குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே மார்க்க ஆதாரம் என்ற நிலைபாட்டிலேயே ஸஹாபாக்கள் இருந்தார்கள். இது தான் ஸலஃபுகளின் அதாவது நபித்தோழர்களின் கொள்கை.

ஆனால், இன்று தங்களை ஸலஃபிகள் எனக் கூறிக் கொண்டு நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாக வழிகாட்டியுள்ள இடங்களிலும், நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொட்டும் வராத நபித்தோழர்களின் கூற்றையும் மார்க்கமாக எடுத்துப் பின்பற்றலாம்! என்ற கொள்கையை ஸலஃப் கொள்கையாக்கி ஸலஃப்(ஸஹாபாக்)களின் கொள்கைக்கே மாற்றமான முறையில் மக்களை திசை திருப்பி வழிகேட்டின் பக்கம் மக்களை அழைத்துச் செல்கிறார்கள் என்பதே நிதர்சன உண்மையாகும்.

நன்றி
Muhammad Azaar

Leave a Comment

Previous post:

Next post: