அபூ லஹபின் மனைவியும் அபூ ஸுஃப்யானின் சகோதரியுமான உம்மு ஜமீல் நபி (ஸல்) அவர்களுக்கு நோவினை கொடுப்பதில் தனது கணவனைவிட குறைந்தவளும் அல்ல! சளைத்தவளும் அல்ல! முட்களை நபி (ஸல்) செல்லும் பாதையிலும் அவர்களது வீட்டின் வாசலிலும் வைத்து விடுவாள். மிகக் கெட்டவளான இவள் எந்நேரமும் நபி (ஸல்) அவர்களை ஏசிப் பேசிக்கொண்டிருந்தாள். பல பொய்களைப் பரப்பிக் கொண்டே இருப்பாள். நபி (ஸல்) அவர்களுக்கு எதிராகக் குழப்பம் விளைவித்துக் கொண்டும், பிரச்சினையின் நெருப்பை மூட்டிவிட்டுக் கொண்டும் இருப்பாள். இதனால்தான் அல்குர்ஆன் அவளை “ஹம்மாலதல் ஹத்தப்” விறகை சுமப்பவள் என்று வர்ணிக்கிறது.
“இழிவுக்குரியவரைத்தான் நாங்கள் ஏற்க மறுத்தோம்; அவரது கட்டளையை புறக்கணித்தோம்; அவருடைய மார்க்கத்தையும் வெறுத்தோம்.”
பிறகு அவள் திரும்பிச் சென்றுவிட்டாள். அப்போது அபூபக்ர் (ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அவள் உங்களைப் பார்த்ததை நீங்கள் பார்க்கவில்லையா?” என வினவ “அவள் என்னைப் பார்க்கவில்லை. அல்லாஹ் என்னை பார்க்க முடியாமல் அவளது பார்வையை மறைத்து விட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)
இச்சம்பவம் பற்றி “முஸ்னத் பஜ்ஜார்’ எனும் நூலின் அறிவிப்பில் வருவதாவது: அவள் அபூபக்ரிடம் வந்து “அபூபக்ரே! உங்கள் தோழர் என்னை கவிதையில் திட்டுகிறார்” என்றாள். அதற்கு அபூபக்ர் (ரழி) “இந்த வீட்டின் இறைவனின் மீது சத்தியமாக! அவருக்கு கவிதை பாடத் தெரியாது” என்று கூறினார்கள். “ஆம்! நீங்கள் சரியாகத்தான் கூறினீர்கள்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரனாகவும் நபி (ஸல்) அவர்களின் அண்டை வீட்டுக்காரனாகவும் இருந்த அபூலஹபும் இவ்வாறே செய்து கொண்டிருந்தான். அவனது வீடு நபி (ஸல்) அவர்களின் வீட்டுடன் இணைந்திருந்தது. அவனும் அவனைப் போன்ற நபி (ஸல்) அவர்களின் மற்ற அண்டை வீட்டார்களும் நபி (ஸல்) அவர்கள் வீட்டினுள் இருக்கும்போது நோவினை அளித்துக் கொண்டே இருப்பார்கள்.
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) வீட்டினுள் இருக்கும்போது நபி (ஸல்) அவர்களின் அண்டை வீட்டார்களான அபூலஹப், ஹகம் இப்னு அபுல்ஆஸ் இப்னு உமைய்யா, உக்பா இப்னு அபீமுயீத், அதீ இப்னு ஹம்ராஃ ஸகஃபீ, இப்னுல் அஸ்தா ஆகியோர் எப்போதும் நபி (ஸல்) அவர்களுக்கு மிகுந்த நோவினை அளித்து வந்தனர். இவர்களில் ஹகம் இப்னு அபுல் ஆஸைத் தவிர வேறு யாரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை. தொழுது கொண்டிருக்கும் போது ஆட்டின் குடலை நபி (ஸல்) அவர்களை நோக்கி வீசுவார்கள். நபி (ஸல்) அவர்கள் வீட்டில் சமைப்பதற்காக சட்டியை வைக்கும்போது அதில் ஆட்டுக்குடலை போடுவார்கள். இதற்காகவே இவர்களிலிருந்து தன்னை மறைத்துக் கொள்வதற்காக ஒரு சுவரை ஏற்படுத்திக் கொண்டார்கள். இவர்கள் அசுத்தங்களை தூக்கி எறியும்போது அதைக் குச்சியில் வெளியே எடுத்து வந்து தனது வீட்டு வாசலில் நின்றவண்ணம் “அப்து மனாஃபின் குடும்பத்தினரே! இதுதான் அண்டை வீட்டாருடன் மேற்கொள்ளும் ஒழுக்கமா?” என்று கேட்டு, அதை ஓர் ஓரத்தில் தூக்கி வீசுவார்கள். (இப்னு ஹிஷாம்)
-அர்ரஹீக்
உமையா இப்னு கலஃப் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களை பார்க்கும்போதெல்லாம் பகிரங்கமாக ஏசிக்கொண்டும், மக்களிடம் அவர்களைப்பற்றி இரகசியமாகக் குறை பேசிக்கொண்டும் இருப்பான். இவன் விஷயமாக சூரத்துல் ஹுமஜாவின் முதல் வசனம் இறங்கியது.
குறை கூறிப் புறம் பேசித் திரிபவர்களுக்கெல்லாம் கேடுதான். (அல்குர்ஆன் 104:1)
இப்னு ஹிஷாம் (ரஹ்) கூறுகிறார்: “ஹுமஜா’ என்றால் பகிரங்கமாக ஒருவரை ஏசுபவன். கண் சாடையில் குத்தலாக பேசுபவன். யிலுமஜா’ என்றால் மக்களைப்பற்றி இரகசியமாக குறைகளை பேசுபவன். (இப்னு ஹிஷாம்)
அபூஜஹ்ல் சில சமயம் நபி (ஸல்) அவர்களிடம் வந்து திருமறையின் வசனங்களை செவிமடுத்துச் செல்வான். ஆனால், நம்பிக்கை கொள்ளவோ, அடிபணியவோ மாட்டான். ஒழுக்கத்துடனோ, அச்சத்துடனோ நடந்து கொள்ளவும் மாட்டான். தனது சொல்லால் நபி (ஸல்) அவர்களுக்கு நோவினை அளிப்பதுடன் அல்லாஹ்வின் வழியிலிருந்து பிறரைத் தடுத்தும் வந்தான். தனது இச்செயலை புகழ்ந்து பேசுவதற்குரிய நற்காரியம் என்றெண்ணி அகந்தையுடனும் மமதையுடனும் நடந்து செல்வான். இவனைப் பற்றியே பின்வரும் திருமறை வசனங்கள் இறங்கின.
(அவனோ அல்லாஹ்வுடைய வசனங்களை) உண்மையாக்கவுமில்லை தொழவு மில்லை. ஆயினும் (அவன் அவற்றைப்) பொய்யாக்கி வைத்து(த் தொழாதும்) விலகிக்கொண்டான். பின்னர், கர்வம்கொண்டு தன் குடும்பத்துடன் (தன் வீட்டிற்குச்) சென்றுவிட்டான். (அல்குர்ஆன் 75:31-33) இப்னு ஹிஷாம்
நபி (ஸல்) அவர்களை கண்ணியமிகு பள்ளியில் தொழுதவர்களாகப் பார்த்த தினத்திலிருந்தே அங்கு தொழுவதிலிருந்து நபி (ஸல்) அவர்களைத் தடுத்து வந்தான். ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் மகாம் இப்றாஹீமிற்கு” அருகில் தொழுததைப் பார்த்த அவன் “முஹம்மதே! நான் உன்னை இதிலிருந்து தடுத்திருக்க வில்லையா?” என்று கூறிக் கடுமையாக எச்சரித்தான். அதற்கு நபி (ஸல்) அவர்களும் தக்க பதில் கூறி அவனை அதட்டினார்கள். அதற்கு அவன் “முஹம்மதே! எந்த தைரியத்தில் நீ என்னை மிரட்டுகிறாய்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவ்வோடையில் வசிப்போரில் நானே பெரியசபையுடையவன் (ஆதரவாளர்களைக் கொண்டவன்) என்பது உனக்குத் தெரியாதா?” என்றான். அப்போது,
ஆகவே, அவன் (தன் உதவிக்காகத்) தன் சபையோரை அழைக்கட்டும். நாமும் (அவனை நரகத்திற்கு அனுப்ப, நரகத்தின்) காவலாளிகளை அழைப்போம்.. (அல்குர்ஆன் 96:17, 18)
ஆகிய வசனங்களை அல்லாஹ் இறக்கினான். (இப்னு ஹிஷாம்)
S.A.Sulthan
Jeddah