K.M.H  அபூ அப்துல்லாஹ்

 

    நீண்ட காலமாக உலக மெங்குமுள்ள முஸ்லிம்கள் ரமழான் இரவுகளில் தராவீஹ் என்ற பெயரால் 20 ரகஅத்துகள் தொழு வருகிறார்கள். பரம்பரைபரம்பரையாக 20 ரகஅத்துகள் தொழுது வருவதால் அதை நியாயபடுத்தவே மனித மனம் விரும்புகின்றது. ஆனால் மனித விருப்பம் மார்க்கம் ஆக முடியாது. அல்லாஹ்(ஜல்), நபி(ஸல்) அவர்களைக் கொண்டு, மார்க்கமாகக் காட்டித் தந்தது மட்டும்தான் மார்க்கமாக முடியும். 

    மார்க்கம் நிறைவு பெறவில்லையா?
   குர்ஆனிலும், ஹதீஸிலும் மார்க்கம் நிறைவாக இல்லை. அதை நிறைவுப்படுத்த மனித அறிவு அவசியமென்று எண்ணுவதே ஈமானைப் பங்கப்படுத்தும் சிந்தனையாகும். குர்ஆனிலும், ஹதீஸீலும் மனிதனின் நேரான வாழ்க்கைக்குத் தேவையானவை, நிறைவாகவும், தெளிவாகவும் இருக்கின்றன என்பதே அறிஞர்களின் ஏகோபித்த முடிவாக இருக்கிறது. இந்த அடிப்படைச்  சிந்தனைகளோடு, ரமழான் இரவுத் தொழுகை எத்தனை ரகஅத்துகள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை கொண்டு  ஆராய்வோம். 

   நாம் இன்று பயன்படுத்தி வரும் தராவீஹ் என்ற பதம் ஹதீஸ்களில் காணப்படவில்லை என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். இரவுத் தொழுகை, ரமழான் தொழுகை, தஹஜ்ஜுத், வித்ர் என்ற பெயர்களாலேயே பல ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் நபி(ஸல்) அவர்கள், உமர்(ரழி) அவர்கள், மற்றும் நபித்தோழர்கள் (8+3=11) ரகஅத்துகளுக்குமேல் இந்த ரமழான் தொழுகை தொழுததில்லை என்றுதான் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தராவீஹ் என்று பெயர் மாற்றம் செய்தவர்களும், 20 ரகஅத்துகளாக ஆக்கியவர்களும் பின்னால் தோன்றியவர்களே அல்லாமல் அல்லாஹ் தனது தூதரைக் கொண்டு கற்பித்தது அல்ல என்பதை  விளங்கிக் கொள்வோமாக.

    ரமழான் தொழுகை
8+3=11 ரகஅத்துகள்
   அன்னை ஆயிஷா(ரழி) அவர்களிடம் அபூசல்மதுப்னு  அப்துர்  ரஹ்மான்(ரழி),  நபி(ஸல்) அவர்களிடன் ரமழான் தொழுகை எவ்வாறு இருந்தது என்று கேட்டதற்கு, "ரமழானிலும், ரமழான் அல்லாத காலங்களிலும் நபி(ஸல்) அவர்கள் 11 ரகஅத்துகளுக்கு மேல் தொழுததே
இல்லை"என்று கூறிய ஹதீஸ் கானப்படும் நூல்கள்:

 

1. புகாரி
2. முஸ்லிம்
3. ஆபூதாவூத்
4. திர்மிதி
5. நஸயீ
6. முஅத்தா இமாம் மாலிக் 
7. இப்னு ஹுஸைமா
8. முஸ்னது அஹ்மத் 
9. முஸ்னது அபூஅவானா
10. முஅத்தா இமாம் முஹம்மது
11. பைஹகீ
12. ஷரஹ்மாஆனில் ஆதார்தஹாவி 
13. ஷரஹ் சுன்னாஹ் 
14. தாரமீ  

பாகம்1 பக்கம் 342-343
பாகம்1 பக்கம் 254
பாகம்1 பக்கம் 196
பாகம் 1 பக்கம் 58
பாகம் 3 பக்கம் 234
பாகம் பக்கம் 81
பாகம் 2 பக்கம் 1
பாகம் 6 பக்கம் 36
பாகம் 2 பக்கம் 334
பாகம் பக்கம் 141
பாகம் 2 பக்கம் 495
பாகம் 2 பக்கம் 282
பாகம் 4 பக்கம் 3
பாகம் 1 பக்கம் 334

   மேற்கண்ட நூல்களில் காணப்படும் இந்த ஹதீஸ், தஹஜ்ஜுத் தொழுகை  சம்பத்தப்பட்டதல்ல என்று இன்று சிலர் வாதிடுகின்றனர். இந்த ஹதீஸ் ரமழான் தெழுகையைக் குறிக்கும் என்று புகாரிக்கு விரிவுரை எழுதிய பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக;

   1. அல்லாமா அஹ்மதிப்னு முஹம்மது கதீப்கஸ்தலானி(ரஹ்) புகாரி விரிவுரை பாகம் 2 பக்கம் 267
   2. அல்லாமா ஹாபிழ் அஹ்மது அலீ ஹனபி சஹரன்பூரி(ரஹ்) புகாரி விரிவுரை பாகம் 1 பக்கம் 154
   3. அல்லாமா ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) புகாரி விரிவுரை பாகம் 4 பக்கம் 254
   4. அல்லாமா அன்வர்ஷா கஷ்மீரி(ரஹ்) புகாரி விரிவுரை பாகம் 2 பக்கம் 420
   5. முல்லா அலீகாரி(ரஹ்) மிர்காத் ஹாஷியா மிஷ்காத் பாகம் 1 பக்கம் 115 இன்னும் பல ஆதாரங்கள் இருக்கின்றன. விரிவஞ்சி விடுகிறோம்.

   அல்லாமா முஹம்மது காஸிம்தானுத்தவி  தேவ்பந்த் மதராஸாவின் ஸ்தாபகர்  "அறிவுடையவர்களிடம்  ரமழான் தொழுகை  (தராவீஹ்) தஹஜ்ஜுத் இரண்டும் ஒன்றுதான்" என்று தனது பைஜுல் காசிமிய்யா பக்கம் 13ல் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆக இந்த ஹதீஸ் தஹஜ்ஜுத் சம்மந்தப்பட்டது. ரமழான் தொழுகை சம்மந்தப்பட்டதல்ல என்று வாதிடுகின்றனர். இவர்கள் வாதம் சரி என்றால் நபி(ஸல்) ரமழானில் ரமழான் தொழுகை 23 ரகஅத்துகள், தஹஜ்ஜுத் 11 ரகஅத்துகள் ஆக 34 ரகஅத்துகள் தொழுதிருக்க வேண்டும். அதுவும் வித்று இரண்டுமுறை வேண்டும். இது அறிவுக்கு பொருந்தாது?  34 ரகஅத்துகள் நபி (ஸல்) தொழுதிருந்தால் 11 ரகஅத்துகளுக்கு மேல் தொழுததே இல்லை என்று ஆயிஷா(ரழி) அறிவித்திருப்பார்களா? என்று ஆராய்ந்துப் பாருங்கள். நபி(ஸல்) அவர்கள் ரமழானின் தொழுகை 8+3=11 ரகஅத்துகள் மட்டுமே தொழுதார்கள் என்பதற்கு மேலும் இரண்டு ஹதீஸுகள்  இருக்கின்றன அவற்றையும் அறியத்தருகிறோம்.

   1.ஜாபிர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் ரமழானில் 8ரகஅத்துகளும் வித்று 3 ரக அத்துகளும் தொழவைத்ததாக அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இப்னு ஹுஸைமா பாகம் 2, பக்கம் 138ல் காணப்படுகிறது.

  2.உபைஇப்னுகஃப்(ரழி) ரமழானின் இரவில் பெண்களுக்கு 8 ரகஅத்துகளும் வித்று 3 ரகஅத்துகளும் தொழவைத்ததை நபி(ஸல்) அவர்களிடம் அறிவித்தபோது நபி(ஸல்) அவர்கள் அதை மெªனமாக ஏற்றுக் கொண்டார்கள் என்ற அறிவிப்பு முஸ்னது அபூயஃலா பக்கம் 155ல் காணப்படுகின்றது. இந்த ஹதீஸை ரயீஸுத் தப்லீக் மெªலவி யூசுப்(ரஹ்) அவர்கள் தனது ஹயாத்துஸ்ஸஹாபா பாகம் 3, பக்கம் 167ல் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

   தப்லீக் தஃலீம் தொகுப்புகளைத் தொகுத்த மெªலவி ஜகரிய்யா (ரஹ்) அவர்கள்  அவ்ஜஸுல் மஸாலிக் என்ற இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் முஅத்தாவின்  விரிவுரை பாகம்1, பக்கம் 39ல் ரமழான் தொழுகை 20 ரகஅத்துகள் என்பதற்கு ஆதாரம் இல்லை, அறிஞர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற கருத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களின் ரமழான் சிறப்பு என்ற தஃலீம் நூலில் ரமழான் தொழுகை 20 ரகஅத்துகள் என்று  எங்குமே  குறிப்பிடப்படவில்லை.

   ரமழான் தொழுகை 20 ரகஅத்துகள் என்ற ஹதீஸ்களின் நிலை?

   நபி(ஸல்) அவர்கள் ரமழானில் 20 ரகஅத்துகள் தொழுததாக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களைக் கொண்டு அறிவிக்கப்பட்ட ஒரு இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் சில கிதாபுகளில் காணப்படுகின்றது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் வருகின்றன: அபூசைபா இப்ராஹீம் இப்னு உஸ்மான், ஹகம் இப்னு உதைபா ஆகிய இருவரும் காஜிகளாக இருந்தார்கள். பொய்யர்கள் என்று அஸ்மாவுர்ரிஜால் (அறிவிப்பாளர்களின்  தகுதிகளை எடைபோடும்) கலையில் வல்லுனர்கள் பலர் பதிவு செய்துள்ளனர்.

   இமாம்களான ஸுஹ்பா, அஹமது, இப்னு முயீன், புகாரி, நஸயீ (ரஹ்-அலை)  போன்றோர்  இந்த இருவரையும் நல்லவர்களாக, நேர்மையாளர்களாகக் கணிக்கவில்லை. ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவரும் எகோபித்து இந்த ஹதீஸ், அன்னை ஆயிஷ(ரழி) அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள உண்மையான ஹதீஸூக்கு எதிராக இருக்கிறது என்று அறிவித்து  நிராகரித்திருக்கிறர்கள்.

   இதைபோல் உமர்(ரழி) 20 ரகஅத்துகள் தொழுதார்கள். தொழவைக்கும்படி சொன்னார்கள். உமர்(ரழி) காலத்தில் 20 ரகஅத்துகள் மக்களால் தொழப்பட்டது போன்ற ஹதீஸ்களும் இட்டுக் கட்டப்பட்ட பலஹீனமான ஹதீஸ்களாக ஹதீஸ்கலை வல்லுனர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. பைஹகீயில் காணப்படும் உமர்(ரழி) காலத்தில் மக்கள் 20 ரகஅத்துகள்  தொழுதார்கள் என்ற ஹதீஸ் பலஹீனமானது, காரணம் இதை ரிவாயத்துச் செய்யும் யஸீதுப்னு ரூமான் உமர்(ரழி) காலத்தில் பிறக்கவே இல்லை என்று பைஹகீ இமாமே பைஹைகி பாகம் 2, பக்கம் 496ல் குறிப்பட்டுள்ளார்கள்.

   உமர்(ரழி) அவர்கள் ஒருவரிடம் ஜனங்களுக்கு 20 ரகஅத்துகள் தொழவைக்கும்படி கட்டளை யிட்டதாக, யஹ்யா இப்னு சயீத்(ரஹ்) அவர்களால் அறிவிக்கப்படும் ஹதீஸை ஆராயும்போது, இந்த யஹ்யா இப்னு சயீத் 5வது தலைமுறையைச் சேர்ந்தவர், உமர்(ரழி) இறப்பிற்கும் 100 வருடம் பின்னால் வாழ்ந்தவர் என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் பதிவு  செய்துள்ளார்கள்.

   உபை இப்னு கஃபு(ரழி) ஜனங்களுக்கு 20 ரகஅத்துகள் தொழ வைத்தார்கள் என்பதும்  ஆதாரமற்றது .காரணம், உபை இப்னு கஃபு (ரழி) நபி(ஸல் )அவர்களது காலத்திலேயே  பெண்களுக்கு 8+3 ரகஅத்துகள் தொழ வைத்து நபி(ஸல்) அவர்களின் அங்கீகாரம் பெற்ற ஹதீஸ் பலமானது. மேலும் உமர்(ரழி), உபை இப்னு கஃபு(ரழி), தமீமுத்தாரி(ரழி) ஆகிய இருவருக்கும்,  ஜனங்களுக்கு 8+3 ரகஅத்துகள் தொழ வைக்க ஏவிய சம்பவம், ஸாயிப் இப்னு யஸீதால் அறிவிக்கப்பட்டதை, இமாம் மாலிக்(ரஹ்) தனது முஅத்தாவிவின் 58-ம் பக்கத்திலும் இமாம் முஹம்மது இப்னு நஸிர்(ரஹ்) தனது கியாமுல்லைல் பக்கம் 91-லும் பதிவு செய்துள்ளார்கள். இது தஹாவீ பாகம் 1, பக்கம் 173லும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷரஹ் மஆனில் ஆதார் பாகம் 2,பக்கம் 293-லும் பதியப்பட்டுள்ளது.

   ஆக ரமலான் இரவுத் தொழுகை(தராவீஹ்) 8+3 என்பதற்கு நபி(ஸல்) அவர்கள் வரைப் போய்ச்சேரும் ஹதீஸ்கள் மூன்றும் ஆதாரபூர்வமானவை. 20 ரகஅத்துகள் என்ற ஹதீஸ்கள் நபி(ஸல்) அவர்கள் வரைப் போய்ச்சேரவில்லை. அறிவிப்புகளும் மிகவும் பலஹீனமானவை என்று ஹதீஸ்கலை வல்லுனர்களாலேயே நிருப்பிக்கப்பட்டுள்ளன. ஆதாரபூர்வமான ஹதீஸ்களை வைத்துச் செயல்படுவதா? பலஹீனமான ஹதீஸ்களை வைத்துச் செயல்படுவதா? என்பதை அறிவுடையவர்கள் ஆராய்ந்து பார்க்கட்டும். மார்க்கத்தை அல்லாஹ்(ஜல்), நபி(ஸல்) அவர்களைக் கொண்டே நிறைவு செய்திருக்கிறான் என்பதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

   இன்னொரு சந்தேகம் :

    அடுத்து சிலர் இன்னொரு ஐயத்தைக் கிளப்புகிறார்கள். நபி(ஸல்) அவர்களை அப்படியே பின்பற்றுகிறவர்கள், ரமழான் இரவுத் தொழுகையை 3 நாட்களில் தானே ஜமா அத்துடன் தொழ வேண்டும். ரமழான் முழுவதும் எப்படி ஜமா அத்துடன் தொழுகிறார்கள்? என்ற கேள்வியே அது.

   நபி(ஸல்) அவர்களின் செயல் மட்டும்தான் மார்க்கம் என்று நினைக்கிறார்கள் போலும். நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் மூன்றும் மார்க்கமே என்று எண்ணுபவர்களே நேர்வழி நடப்பவர்கள் ஆவார்கள். நபி(ஸல்) அவர்கள் மூன்று நாட்கள் ஜமா அத்தாக தொழ வைத்தார்கள். நான்காவது நாள் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. பஜ்ரில்," நீங்கள் எனக்காக காத்திருந்தீர்கள் ,இந்தத் தொழுகை பர்லாக ஆக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமே என்னை வரவிடாமல் தடுத்து விட்டது" என்ற கருத்தில் தெளிவாக அறிவிப்புச் செய்தது புகாரியில் பாகம்1, பக்கம் 342ல் காணப்படுகின்றது. மேலும், நபி(ஸல்) அவர்கள் காலத்திலேயே நபித் தோழர்கள் சிறுசிறு ஜமாஅத்தாக தொழுததற்கும், நபி(ஸல்) அவர்கள் அதை அங்கீகரித்ததற்கும் ஆதாரங்கள் கிடைக்கின்றன. ஆக, செயல் அளவில் 3 நாட்கள் ஜமாஅத்தாக தொழுதுவிட்டு, தக்க காரணத்தோடு நிறுத்திக் கொண்டாலும், சொல், அங்கீகாரம்  இரண்டின் அடிப்படையில் ரமழான் முழுவதும் ஜமாஅத்தாகத் தொழுவது நபி வழியே ஆகும்.

   உமர்(ரழி) அவர்களின் செயல்:

   நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சிறுசிறு ஜமாஅத்தாக நடந்து கொண்டிருந்ததை உமர்(ரழி) அவர்கள் தமது ஆட்சி காலத்தில் ஒரே ஜமா அத்தாக ஆக்கினார்கள் என்பதே புகாரியில் (பாகம்1, பக்கம்342) காணப்படும் தெளிவான ஹதீஸாகும். அந்த ஹதீஸில் இத்தனை ரகஅத்துக்கள் என்று குறிப்பிடப்படவில்லை. (11 ரகஅத்துக்களுக்குரிய ஹதீஸ் பக்கத்தில் இடம் பெறுவதால் ரகஅத்துகள் குறிப்பிடப்படவில்லை என்று நம்ப இடம்முண்டு). உமர்(ரழி) அவர்களின் இந்தச் செயலை சரியான கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்கள் அவர்கள் புதிய ஒரு முறையை மார்க்கத்தில் நுழைத்தார்கள் என்றே நபி(ஸல்) அவர்களின் நடைமுறைக்கு மாறாக நடந்தார்கள் என்றே ஒரு போதும் சொல்ல மாட்டார்கள்.

   இமாம் அபுஹனீபா(ரஹ்)அவர்களின் அபிப்பிராயம்:

   'உமர்(ரழி) அவர்கள் (ஒரோ ஜமாஅத்தாக ஆக்கியது)இதைத் தன்புறத்திலிருந்து செய்யவில்லை'. நபி(ஸல்) அவர்களிடமிருந்து  பெற்ற ஆதாரங்களை வைத்துத்தான் அப்படிச் செய்தார்கள் என்று இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள், இமாம் அபூயூசுப்(ரஹ்) அவர்கள் கேட்ட கேள்விக்கு அளித்த பதில் பதாவாயே சுபுக்கி பாகம்1, பக்கம்166ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களது பார்வையில் ரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்) 8ரக் அத்துக்கள் மட்டும்தான். 20ரக்அத்துக்கள் என்பதற்கு அவர்கள் புறத்திலிருந்து ஒரு சிறு ஜாடையையும் காணமுடியவில்லை என்பதற்கு இந்த 'பதாவாயே சுபுக்கி பக்கம்166ல் காணப்படும் இந்த சம்பாஷனை சான்று பகர்கின்றது'.

   இமாம் அபூஹனிபா (ரஹ்)அவர்களின் மாணவர் இமாம் மூஹம்மது(ரஹ்) அவர்கள் தமது முஅத்தாவின் 141ம் பக்கத்தில் ரமழான் இரவுத்  தொழுகையின் பாடத்தில் அன்னை ஆயிஷா(ரழி) அவர்களால் ரிவாயத்து செய்யப்படுகின்ற 11ரகஅத்துக்களையே பதிவு செய்துள்ளார்கள். அந்தப் பாடத்தில் 20 ரகஅத்துக்களுக்கான ஹதீஸ் ஒன்றுகூட இல்லை. ரமழான் இரவுத் தொழுகைக்கு இந்த 11 ரகஅத்துக்கள் ஹதீஸையே நாம் ஆதாரமாக எடுத்திருக்கிறோம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இமாம் தஹாவி(ரஹ்) அவர்கள் ஷரஹ் மஆனி ஆதாரம் பாகம்2 பக்கம் 334ல் இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்களின் பார்வையில்  8ரகஅத்துக்களுக்குமேல் அதிகப்படுத்துவது 'மக்ரூஹ்' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

   இமாம் மாலிக் (ரஹ்)அவர்களின் அபிப்பிராயம்:
   ஹாபிழ் சுயுத்தி(ரஹ்) அவர்கள் தனது கிதாபு மஸாபீஹின் 76ம் பக்கத்தில், இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் "உமர்(ரழி)அவர்களால் எடுத்துக் கொள்ளப்பட்ட அந்த ரகஅத்துகள் எனக்கு மிகவும் பிரியமானவை.  அவை 11ரகஅத்துகளாகும்,  மேலும் 13 ரகஅத்துகள் இதற்கு நெருக்கமானது. ஆனால் ஜனங்கள் இந்த அளவு அதிக ரகஅத்துகளை எங்கிருந்து பெற்றார்கள்? என்பது தெரியவில்லை" என்று குறிப்பிடுவதாக அறிவிக்கிறார்கள்.

   இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களின் அபிப்பிராயம்:
   இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் மக்கா, மாதீனாவின்  நடைமுறை காரணமாக 20 ரகஅத்துகள் முஸ்தஹப் என்று தனது கிதாப் உம்மில் பதிவு செய்துள்ளார்கள். ஆயினும் ஆயிஷா(ரழி) அவர்களின் 11ரகஅத்துகள் ஹதீஸையே ஆதாரமாக எடுத்திருக்கிறார்கள். முஸ்லிம் பகாம்1 பக்கம் 254ல் காணப்படும் ஆயிஷா(ரழி)  அவர்களின் 11 ரகஅத்துகள்  விஷயமாக
 இமாம்  நவவீ(ரஹ்)"  இந்த  ஹதீஸை வைத்து கிராஅத், கியாம் (நிலை) நீட்டமாக இருப்பதற்கு ஆதாரம் கிடைக்கிறது. ரகஅத்துகளை அதிகப்படுத்துவதைவிட கிராஅத், கியாமை நீட்டுவது சிறந்தது" என்று குறிப்பிடுகிறார்கள்.

  
மாம் அஹ்மது இப்னு ஹம்பல்(ரஹ்) அவர்களின் அபிப்பிராயம்:
   இமாம் இப்னுகுதாமா(ரஹ்) தனது மூன்றாவது கிதாப் மஆனியின் பாகம் 2, பக்கம் 123ல்,"இமாம் அஹ்மது இப்னு ஹம்பல்(ரஹ்)  20 ரகஅத்துகள் என்று முடிவு எடுத்திருந்தார்கள்" என்று குறிப்பிடுகின்றார். ஆனால் இக்கூற்று முற்றிலும் ஆதாரமற்றது, தவறானது. காரணம், இப்னு குதாமா(ரஹ்) அவர்கள் இமாம் அஹ்மது (ரஹ்) அவர்களுக்குச் சில நூறு வருடங்கள் கழித்து ஹிஜ்ரி  541ல்  ஜமாயீல் என்ற கிராமத்தில் பிறந்திருக்கிறார்கள். இமாம் அஹ்மது (ரஹ்) அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டிருக்க முடியாது. இந்தச் செய்தி கிடைத்த வழியையும் அவர்கள் குறிப்பிடவில்லை.

   இமாம் பகவீ(ரஹ்) அவர்கள் தனது ஷரஹுஸ்ஸுன்னத் பாகம் 4.பக்கம் 123ல் தெளிவாக,"
இமாம் அஹ்மது(ரஹ்) ரமழான் தொழுகை விஷயமாக இத்தனை ரகஅத்துகள் என்று குறிப்பிடவில்லை. அது விஷயமாக முடிவு செய்வதற்கு எவ்வித அவசியமும் ஏற்படவில்லை. ஏனென்றால் ரமழான் இரவுத் தொழுகை 11 ரகஅத்துகள் தான் என்று ஹதீஸை அவர்களது கிதாப் முஸ்னது அஹ்மதில் ரிவாயத் செய்துள்ளார்கள்", என்று பதிவு செய்துள்ளார்கள்.

   மார்க்கத்தில் அதிகப்படுத்தலாமா?
   அடுத்து, நபி(ஸல்)அவர்கள் தொழுதது 8+3 ரகஅத்துகள் என்பது சரிதான். ஆனாலும்,  ரமழான் மாதத்தில் இரவு காலங்களில் அதிக ரகஅத்துகள் தொழுவது நல்லதுதானே? அதிலே என்ன கெடுதி இருக்கிறது? நன்மைதானே என்று  சொல்கிறார்கள்.

    நபி(ஸல்) அவர்களால்" பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகள், வழிகேடுகள் அனைத்தும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்" என்று தெளிவாக இனம் காட்டப்பட்டவை, நாம் நினைப்பது போல் கடிகாரம் கட்டுவதோ கான்கிரீட் கட்டிடத்தில் வசிப்பதோ, பிளேனில் பறப்பதோ அல்ல. மாக்கத்தில் நன்மை  கிடைக்கும் என்ற நோக்கத்தோடு நபி(ஸல்)அவர்களால் காட்டித் தரப்படாத அமல்களைச் செய்வதும், அதிகப்படுத்துவதும் தான் என்பதை இந்த முஸ்லிம் சமுதாயம் நன்கு உணர்ந்து கொள்ளவேண்டும். கிழே  குறிப்பிடப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நன்கு நோட்டமிட்டு  நன்மை என்று மார்க்கத்தில் அதிகப்படுத்தலாமா என்பதை ஆராய்ந்து பாருங்கள்.

   ஒரு காட்டரபி நபி(ஸல்) அவர்களிடம் வந்து உளுவின் விவரத்தைக் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் மும்முன்று முறைகளாக உளுச் செய்து காட்டி," இவ்விதமாகத்தான் உளுச் செய்ய வேண்டும்"என்று கூறி, பின்னர் "எவர் இதைவிட அதிகமாகச் செய்கிறரோ அவர் நிச்சயமாகத் தீமையைச் செய்தவராகவும், அளவு மீறியவராகவும், அநியாயம் செய்பவராகவும் ஆவார். "என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு  அம்ருப்னுல் ஆஸ் (ரழி) நூல்:அபூதாவூது, நஸயீ

   நீண்டதொரு ஹதீஸின் இடையில் "நற்செயல்களில் எனக்கு மாறு செய்வதில்லை" என்று நபி(ஸல்) அவர்கள் நபித் தோழர்களிடம் உறுதிப் பிரமாணம் வாங்கியது  குறிப்பிடப்பட்டுள்ளது. அறிவிப்பவர்: உபாதா இப்னு ஸாமித் (ரழி) நுல்:புகாரி, முஸ்லிம், முஅத்தா, திர்மதி, நஸயீ

   அப்துல்லா இப்னு உமர்(ரழி) அவர்கள் அபூமூஸா(ரழி) அவர்களிடம் "உங்கள் தந்தையாரிடம் என் தந்தை என்ன கூறினார்கள் என்பதை தாங்கள் அறிவீர்களா?" என்று ஆரம்பிக்கும் மற்றொரு நீண்ட ஹதீஸீல் இறுதியில் உமர்(ரழி)அவர்கள்," எவன் வசம் உமருடைய உயிர் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! மொய்யாகவே நாம் நபி(ஸல்) அவர்களுடன் செய்தவை அனைதும் நமக்குப் பலன் அளிக்க அப்படியே இருந்து, அவர்களுக்குப் பின்னர் நாம் செய்த எல்லாச் செயல்களும் நம்மை வேதனையை விட்டும் காக்க முழுக்க முழுக்க போதுமானவையாக இருந்துவிடாதா என நான் விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்கள்.அறிவிப்பவர்: அபூபுர்தாஆமிர் இப்னு அபீமுஸா நூல் : புகாரி

   நபி(ஸல்) அவர்கள் செய்ததற்குமேல் செய்ததை உமர்(ரழி) அவர்கள் எந்த அளவு பயந்துள்ளனர் என்பதை இந்த ஹதீஸ் தெளிவு படுத்துகிறது. இந்த நிலையில், அவர்கள் 20 ரகஅத்துகள் தொழுதார்கள் என்பது சரிதானா என்பது சிந்தனைக்குரியது. "எவரும் நம் மார்க்கத்தில், மார்க்கத்தில் இல்லாதவற்றைப்  புதிதாக உண்டாக்கினால், அவை மறுக்கப்பட வேண்டியவையாகும்" என்று நபி(ஸல்)அவர்கள் அருளினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்

   ஹஜ்ஜில் கல் எறிவது   சம்பந்தமான ஹதீஸில்," இவ்விதமான கற்களாகவே  இருக்க வேண்டும். மேலும் நான்  உங்களுக்கு  அச்சமூட்டுகிறேன்.  நீங்கள் மார்க்கத்தில் அளவுக்கு மீறிச் செயலாற்றுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நிச்சயமாக உங்களுக்கு முன்னுள்ளோர் தங்களின் மார்க்கத்தில்  அளவுக்கு  மீறியதால்  அழியப்பட்டனர்", என்று  கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு  அப்பாஸ்(ரழி) நூல்: நஸயீ

   நபி(ஸல்) அவர்களின் மனைவியின் இல்லத்திற்கு மூவர் சென்று நபி(ஸல்) அவர்களின் வணக்க முறையைப்பற்றி அவர்களிடம் விசாரித்தனர். அதற்கு விடையளிக்கப்பட்டபோது அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்கத்தை  மிகக் குறைவாக  மதிப்பிட்டு, "நாம் அவர்களுடன் சமமாக வணங்க எவ்விதம் சாலும்? அவர்களுடைய முன்பின் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு இருக்கின்றனவே" என்று தம் மனதிற்குள் எண்ணிக்கொண்டனர். அப்போது அவர்களில் ஒருவர்,"நான் நாள் தோறும் இரவு முழுவதும் தொழுது வருவேன்"என்றார். மற்றெருவர் "நான் ஆண்டு முழுவதும்    நோன்பு நோற்பேன்,  நோன்பின்றி ஒரு நாளும் கழிக்க மாட்டேன் என்றார்". முன்றாமவர், "நான் ஒருபோதும் மணமுடிக்க மாட்டேன், பெண்களை விட்டும் ஒதுங்கி இருப்பேன்" என்றார். இதற்குள் நபி(ஸல்) அவர்கள் அங்கு வந்து விட்டார்கள். "நீங்கள் தாமா இன்ன இன்ன விதமாகவெல்லாம் கூறிக்கொண்டிருந்தீர்கள்? என்று வினவிவிட்டு கூறினர்," அறிந்து  கொள்ளுங்கள் இறைவன் மீது ஆணையாக, நான் உங்களைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் அஞ்சுபவனாகவும், மிகவும் தூய்மையாளனாகவும் உள்ளேன், எனினும் நான் நோன்பு நோற்கவும்  செய்கிறேன், நோற்காமலும் இருக்கிறேன், தொழவும் செய்கிறேன் தூங்கவும் செய்கிறேன். திருமணமும் செய்துள்ளேன், எனவே எவரேனும் என் வழியைப் புறக்கணிப்பின் அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று அருளிச் செய்தனர். அறிவிப்பவர்:அனஸ் (ரழி) நூல்: புகாரி, முஸ்லிம், நஸயி

   மக்கமா நகரம் வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு ரமழான் மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் அங்கு சென்றனர்," குராவுல் கமீம்"என்ற இடத்திற்குச் செல்லும் வரை அவர்கள் நோன்போடு சென்றார்கள். மக்களும் நோன்போடு இருந்தார்கள். பின்னர், நபி(ஸல்) அவர்கள் ஒரு கோப்பை தண்ணீர் கொணரச் செய்து அனைவரும் பார்க்கும் அளவுக்கு கோப்பையை உயர்த்தி, மக்களும் அதைக் கண்ணுற்ற பின் அதனை பருகினர். இதன்பின் மக்களில் சிலர் நோன்போடு இருப்பதாக நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது, அதற்கு அவர்கள்," அத்தகையோர் பாவிகளே, அத்தகையோர் பாவிகளே", என்று கூறினர். அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி) நூல்: முஸ்லிம், திர்மிதீ

  நபி(ஸல்) அவர்கள்  மார்க்கத்தை நிறைவாகக் கற்றுத்தந்து விட்டார்கள்,  எதனையும் மறைக்கவில்லை, சொன்னதையே செய்து காட்டினார்கள், குர் ஆனின் வாழ்க்கையை முழுமையாக பிரதிபலித்தார்கள் என்று பூரணமாக நம்புகிறவர்கள், நபி(ஸல்) அவர்கள் செய்ததற்கு மேல் ஒரு அணுவத்தனையையும் நன்மை  என்று ஒருபோதும் செய்யமாட்டார்கள். தொழுகையாக இருக்கட்டும், திக்ராக இருக்கட்டும், எதுவாக இருக்கட்டும் நபி(ஸல்) அவர்கள் எதை எப்படி எந்த அளவு செய்து காட்டினார்களோ அதை அப்படியே அந்த அளவு மட்டுமே செய்வது கொண்டு திருப்தி அடைவார்கள். அதுவே பூரணமான மார்க்கமென்று உறுதியாக நம்புவார்கள். அல்லாஹ்(ஜல்) அந்த நல்ல கூட்டத்தில் நம்மையும் இணைத்து வைப்பானாக ஆமீன்.
 

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த