தர்ஹா வழிபாடு

Post image for தர்ஹா வழிபாடு

in இணைவைத்தல்

இஸ்லாத்தை அரபு மண்ணில் நபி (ஸல்) அவர்கள் அறிமுகப்படுத்தும் போது, மக்களில் சிலர் முக்கியமான தொரு நபர் இறந்து அவர் அடக்கம் செய்யப்பட்டதும், அவர்கள் இறந்து போன பின்பும் கூட, அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என நம்பி அவர்களின் புதைகுழிக்குச் சென்று அவைகளை வழிபடுவதும், அந்த இடத்தில் அறுத்துப் பலியிடுவதும், தங்களின் நேர்ச்சைகளை அவ்விடத்திலேயே நிறைவேற்றுவதுமாய் இருந்தனர். இன்னும் சிலர் இறந்து போனவர்களை உருவமாக சிலை வடிவில் செய்து வணங்கிடவும் செய்தனர்.

வழிபடுவது, நேர்ச்சை செய்வது அறுத்துப் பலியிடுவது, பிரார்த்தனை செய்வது போன்ற
வணக்கங்கள் அல்லாஹ்விற்கு மட்டுமே செய்ய வேண்டும் என்றிருக்க, அல்லாஹ் அல்லாத இறந்து
போனவர்களின் சமாதி முன்பும், சிலைகள் முன்பும் செய்ய மக்கள் முன் வரக்காரணமாக
அமைந்தது அவர்கள் கப்ருகளை ஸியாரத் செய்யச் சென்றது தான். இதைத் தடை செய்து விட்டால்,
அவர்கள் வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்குச் செய்ய மாட்டார்கள் என,
எண்ணியே இஸ்லாம் ஆரம்ப காலத்தில் ஸியாரத் செய்வதைத் தடை செய்து விட்டது. பின்பு
மக்கள் இஸ்லாத்தைத் தழுவியதும் அவர்கள், மண்ணறைவாசிகளால் ஏதும் செய்ய இயலாது என்று
நம்பியதும் அவர்களைச் சிறிது காலத்திற்குப் பின்பு ஸியாரத் செய்ய இஸ்லாம்
அனுமதித்தது.

உங்களை (முதலில்) கப்ருகளை ஸியாரத் செய்ய தடை செய்திருந்தேன். (தடை நீக்கப்பட்டது
இனிமேல்) அவைகளை ஸியாரத் செய்யுங்கள் என, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : புரைதா (ரலி) நூல்கள் : முஸ்லிம், திர்மிதி, ஹாகிம், அபூதாவூத்,
இப்னு ஹிப்பான்).

ஸியாரத்தின் நோக்கம்

ஸியாரத் செய்வதால் ஏதேனும் பரக்கத் கிடைக்கும், அங்கே அடக்கமாகி இருப்போரின் ஆசி
கிடைக்கும் என்றெல்லாம் நாம் எண்ண சிறிதும் ஆதாரம் இல்லை. ஸியாரத்தின் நோக்கம்,
மரணச் சிந்தனையும், மறுமை சிந்தனையும் ஏற்பட வேண்டும் என்பது மட்டுமே!

கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள், நிச்சயமாக அது உலகப் பற்றை நீக்கும். மறுமையை
நினைவுபடுத்தும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸயிதுல் குத்ரீ
(ரலி) நூல் : அஹ்மது

என் தாயின் கப்ரை ஸியாரத் செய்ய என் இறைவனிடம் அனுமதி கேட்டேன். எனக்கு
அனுமதியளித்துள்ளான். எனவே, நீங்களும், கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில், அது
மரணத்தை நினைவுபடுத்தும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் :
அபூஹ{ரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், திர்மிதி, அபூதாவூது, நஸயீ.

ஸியாரத் செய்யும் முறை

ஸியாரத்திற்கு அனுமதி என்றதும், பத்தி, பழம், தேங்காய், சர்க்கரை, பூ என்று படையல்
பொருட்களைக் கொண்டு செல்வதோ, அங்கு துஆ ஓதிட ஆள் தேடுவதோ, அவர்களுக்கு கூலிப்பணம்
கொடுப்பதோ என்று செயல்படுவது கூடாது. ஏன் எனில், ஸியாரத் செய்வதற்கு நபி (ஸல்)
அவர்கள் கற்றுத் தந்த முறைகளில் அவகைள் ஏதும் இல்லை. கப்ரை ஸியாரத் செய்யச் செல்வோர்,
அங்கே அடக்கமாகி உள்ளவர்களுக்காக ஸலாம் கூற வேண்டும். அவர்களுக்காக துஆச் செய்ய
வேண்டும். ஆனால் அவர்களிடம் துஆக் கேட்கக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் மண்ணறை பகுதிக்கு வரும் போது,

அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன் வ இன்னா இன்ஷா அல்லாஹ{ பிகும் லாஹிகூன்

(முஃமினான மண்ணறைவாசிகளே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும்! நிச்சயமாக நாங்களும்
அல்லாஹ் நாடினால் உங்களை மரணம் மூலம் சந்திப்பவர்களே! என்று கூறுவார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹ{ரைரா (ரலி). நூல்கள் : முஸ்லிம், அஹ்மது, நஸயீ.

அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத் தியாரி மினல் முஃமினீன் – வல் முஸ்லிமீன் – வ இன்னா இன்ஷா
அல்லாஹபிகும் லாஹிகூன். நஸ்அலுல்லாஹ லனா வலகுமுல் ஆபியா

(முஃமினான – முஸ்லிமான மண்ணறைவாசிகளே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! நிச்சயமாக
இன்ஷா அல்லாஹ் நாங்களும் உங்களை அடுத்து வருபவர்களே! உங்களுக்கும், எங்களுக்கும்
அல்;லாஹ் விடம் சுக வாழ்வைக் கேட்கிறோம்) என்று கப்ரு பக்கம் வரும் போது கூறும்படி
ஸஹாபாக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தார்கள். அறிவிப்பாளர் : புரைதா (ரலி)
நூல்கள் : முஸ்லிம், அஹமது, இப்னுமாஜா).

மண்ணறைவாசிகளுக்குத் தான் நாம் துஆச் செய்ய வேண்டுமே தவிர, அவர்களிடம் நம் தேவைகளை
கூறிப் பிரார்த்திப்பதோ, வழிபாடு செய்வதோ கூடாது. துஆ என்றதும், பாத்திஹா ஓதுவது
என்று எண்ணிவிடக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த மேற்கண்ட துஆக்கள் மட்டுமே
சொல்ல வேண்டும்.

காஃபிர்களின் கப்ரை ஸியாரத் செய்யலாமா?

மரணத்தை நினைவுபடுத்திக் கொள்ளும் முகமாக முஸ்லிமல்லாதவர்களின் கப்ரைக் காணவும்
செல்லலாம். ஆனால், முஸ்லிம்களின் கப்ரில் சொல்லும் துஅவை சொல்லக் கூடாது.
அவர்களுக்காக பாவமன்னிப்புக் கேட்கவும் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் தன் தாயின் கப்ரை ஸியாரத் செய்யும் போது அழுதார்கள்.
சுற்றியுள்ளோர்களும் அழுதார்கள். பின்பு என் தயாருக்காக பாவ மன்னிப்புக் கோர என்
இறைவனிடம் அனுமதி கோரினேன். எனக்கு அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் கப்ரைக் காண
அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதிக்கப்பட்டது. எனவே நீங்களும் ஸியாரத் செய்யுங்கள்.
நிச்சயமாக அது மரணத்தை நினைவுபடுத்தும் எனக் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹ{ரைரா
(ரலி) நூல்கள் : முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, திர்மிதி)

முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) நம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும் அவர்கள் நரக
வாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின், அவர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கும்,
ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல! (அல்குர்ஆன் : 9:113).

ஆண்களுக்கே அனுமதி! பெண்களுக்கு இல்லை!

கப்ருகளை ஸியாரத் செய்ய ஆண்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கப்ரு
உள்ள இடத்தில் வர அனுமதி இல்லை.

கப்ருகளை ஸியாரத் செய்யச் செல்லும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹ{ரைரா (ரலி) நூல்கள் : அஹ்மத், இப்னுமாஜா, திர்மிதி, இப்னு
ஹிப்பான்).

கப்ருகளில் விழாக் கொண்டாடலாமா?

பெரியார்கள் என்ற பெயரில் கப்ருகளை கட்டிடமாக எழுப்பி, அவைகளுக்கு தனி அறை
எழுப்பியும், அந்த கப்ரின் மீது பச்சைத் துணி போர்த்துவதும், கப்ரில் ஓரப் பகுதியில்
எண்ணைத்தூண் வைத்து, அதில் எண்ணெய்யை ஊற்றி, வருவோர் போவோரெல்லாம் அதை கண்ணில்
தடவிக் கொள்வதும், கப்ரின் அருகில் பத்தி வைத்தக் கொளுத்தி வைப்பதும், கப்ரில்
சந்தனத்தை தெளிப்பதும், அங்கே ஒரு கூட்டம் வருவோரை ஏமாற்றி சுரண்ட அமர்ந்திருப்பதும்
இது போன்ற எந்த செயல்பாட்டுக்கும் துளி கூட ஆதாரம் இல்லை.

கப்ருகள் கட்டப்படுவதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாக தடுத்துள்ளார்கள்.

கப்ருகள் கட்டப்படுவதையும், பூசப்படுவதையும், அதன் மீது உட்காருவதையும் நபி (ஸல்)
அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர்(ரலி), நூல்கள் : அஹ்மது, முஸ்லிம்,
நஸயீ, அபூதாவூத், திர்மிதி.

யூத கிறிஸ்த்தவர்களில் ஒரு நல்ல மனிதன் இறந்து விடும் போது, அவனது கப்ரின் மீது ஒரு
வணங்கும் இடத்தை கட்டிக் கொள்வார்கள். நாளடைவில் அதில் சில வடிவங்களையும் அமைத்துக்
கொள்வார்கள். அல்லாஹ்விடம் இவர்களே மிகக் கெட்டவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி.

யூதர்களும் கிறிஸ்த்தவர்களும் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்கும் இடமாக ஆக்கிய
காரணத்தால் அல்லாஹ் சபித்து விட்டான். என, தனது மரணத் தருவாயில் நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) அவர்கள் நூல் : புகாரி.

நீங்கள் எனது கப்ரை விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள் என்று நபி (ஸல்)
அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பாளர் : அபூஹ{ரைரா (ரலி) நூல் : அபூதாவூத்.

கப்ருகள் கட்டிடமாக இல்லையெனில், சிறிது காலத்திலேயே கப்ரு உள்ள இடமாக அது இருக்காது.
மேலும் யாருடைய கப்ரு என அறிய முடியாமல் போய் விடும். இதனால் அனுமதிக்கப்படாத செயல்
முறைகள் உருவாகவும் வாய்ப்பில்லை. ஆனால் கப்ருகள் கட்டிடமாக கட்டப்பட்டாலோ எல்லா
அநாச்சாரங்களும் வந்து விடும். இதனால் தான் கட்டிடமாக கட்டடப்படும் கப்ருகளை
தரைமட்டமாக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

உயரமான எந்த கப்ரையும், (இடித்து) சமப்படுத்தாமல் விட்டு விடாதே! எனக் கூறி, நபி (ஸல்)
அவர்கள் என்னை அனுப்பிய பணிக்கே உம்மையும் அனுப்புகிறேன், என அலீ (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹய்யாஜீல் அஹ்தீ (ரலி) நூல்கள் : முஸ்லிம், திர்மிதி, நஸயீ,
அபூதாவூத், அஹ்மது.

தர்காக்களுக்குச் செல்லலாமா?

தர்கா என்ற பெயரில் கப்ருகளை கட்டி வைத்து உள்ளனர். அதை ஸியாரத் செய்யச் செல்லக்
கூடாது. இங்கே செல்வோரிடம் மரணச் சிந்தனை, ஸியாரத்தின் நோக்கம் என்பது இல்லாமல்,
பரக்கத்தே என்பதாக உள்ளது.

காஃபிர்களின் கப்ரையும் காணலாம் என்பதில் இருந்தே ஸியாரத்தின் நோக்கம் பரக்கத் அல்ல
என்பது தெளிவாகும். நோக்கம் சிதைந்து விடுவதாலும், கப்ருகளை கட்டக் கூடாது என்ற
ஹதீஸுக்கு மாற்றமாக கட்டிடமாக கட்டி வைத்துள்ளதாலும், விழாக்கள் நடத்தும் இடமாக
கப்ருகள் இருக்கக் கூடாது என்பதற்கு மாற்றமாக விழா நடக்கும் இடமாக உள்ளதாலும் மேலும்
பல அனாச்சாரங்கள் நடைபெற காரணமாக உள்ளதாலுமே தர்காக்களுக்குச் செல்லக் கூடாது.

ஸியாரத் செய்யச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குடன் தர்காக்களுக்கு
சென்றால் தவறா? என்ற கேள்வி எழவே செய்யும்!

தர்கா என்பது மட்டுமல்ல, எந்த இடத்தில் தவறு நடந்தாலும் ஒரு முஸ்லிம் கையால் தடுக்க
வேண்டும் முடியாது என்றால் மனதளவில் வெறுத்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.
தர்காக்களில் தவறு நடக்கிறது. குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றமாக கட்டிடம்
கட்டப்பட்டுள்ளது. பாத்திஹாக்கள் ஓதப்படுகிறது. வழிபாடு செய்யப்படுகிறது. இப்படி பல
அநாச்சாரங்கள் நடந்தும் தடுக்க முடியாத முஸ்லிம் அங்கு போகாமல் இருப்பதே சரியாகும்.

உங்களில் எவரேனும் கூடாத காரியங்கள் செய்யப்படுவதை கண்டால், அவர் தன் கையால் அதை
மாற்றட்டும். இயலவில்லை எனில், நாவால் (கூறித் தடுக்கட்டும்), இயலவில்லை எனில், தன்
இதயத்தால் (வெறுக்கட்டும்) இதுவே ஈமானின் பலவீனமான நிலையாகும் என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ ஸஈத் (ரலி) நூல் : முஸ்லிம்.

எனவே, ஸியாரத் செய்ய விரும்பும் ஆண்கள், நபி (ஸல்) அவர்கள் கூறித் தந்த ஒழுங்குப்படி
பொது மண்ணறைக்கு மட்டுமே செல்ல வேண்டும். தர்காக்களுக்குச் செல்லக் கூடாது.
பெண்களுக்குச் ஸியாரத் செய்ய அனுமதி இல்லை.

நமது கேள்வியும் குர்ஆனின் பதிலும்

அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்துப் பிரார்த்திக்கலாமா?

சான்று :

அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப்
பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால்
பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள். அவர்கள் இறந்தவர்களே
உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள்
அறியமாட்டார்கள். உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான்; எனவே, எவர்கள் மறுமையை
நம்பவில்லையே, அவர்களுடைய நெஞ்சங்கள் (இவ்வுண்மையை) நிராகரிப்பவையாக இருக்கின்றன –
மேலும் அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள். (16:20-22)

சான்று : 2

நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப்
போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப்
பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! (7:194)

இறந்தவர்கள் (கப்ருகளில் உள்ளவர்கள்) செவியேற்க முடியுமா?

சான்று :

அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக
அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், கப்ருகளில் உள்ளவர்களைக்
கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை. (35:22)

அல்லாஹ் அல்லாதவரை அழைப்பவர் யார்?

சான்று : 1

உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர்
பிரார்த்திக்க வேண்டாம்; (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில்
ஒருவராகிவிடவீர்.(10:106)

சான்று : 2

கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத – அல்லாஹ் அல்லாதவர்களை
அழை;ப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது.
(46:05)

சான்று : 3

நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலர்களாக எடுத்துக்
கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு)
இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம். (18:102)

அல்லாஹ் அல்லாதவர் உதவி செய்ய முடியுமா?

சான்று :

அவனையன்றி (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள எண்ணிக்கொண்டிருப்பவர்களை
அழைத்துப்பாருங்கள்; அவர்கள் உங்களுடைய கஷ்டத்தை நிவர்த்திக்கவோ அல்லது
திருப்பிவிடவோ சக்தி பெறவில்லை (என்பதை அறிவீர்கள்). (17:56)

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக
அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம்
ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது. இன்னும், அவர்களிடமிருந்து ஒரு
பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக்
கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பவஹீனர்களே. (22:73)

அல்லாஹ்விடத்தில் சிபாரிசு செய்ய முடியுமா?

சான்று :

அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பரிந்து பேசபவர்களாக எடுத்துக்
கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! ”அவை எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல்
இருந்த போதிலுமா?”” (என்று.) ”பரிந்து பேசதல் எல்லாம், அல்லாஹ்வுக்கே உரியது;
வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உரியது; பின்னர் அவனிடமே நீங்கள்
மீட்டப்படுவீர்கள்”” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (39:43-44)

அல்லாஹ்வின் கட்டளையை ஏற்காதவர் யார்?

எவனொருவன் அர் ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு
நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான்.
(43:36)

இறைவனிடமே உங்களது தேவைகளைக் கேளுங்கள் :

”என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக்
கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் –
நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க
மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்”” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
(39:53)

{ 7 comments… read them below or add one }

mohamed arif January 24, 2012 at 2:09 am

All koorugiran,
Irainesargalukku maranamillai enbathaga,
Piragu evvaru avargal iranthuvittathaga koorugireergal,

Reply

b m faiyz February 10, 2012 at 5:21 pm

nichayamaha allah kooruhiran ovvoru aanmavum maranathai suvaithe theerum enru koori irukiran brother

Reply

Mohammed nibras February 10, 2012 at 9:25 pm

Maranathirku pinbu than uyirudan irukiran endru iraivan solgiran bro

Reply

yaseer February 11, 2012 at 12:31 am

andha vasanam endha atthiyathla irukku? ungalala nirubikka mudiyumaaaa?

Reply

Shariff Ahamed. May 4, 2019 at 5:54 am

Please read Tamil Quran.

Reply

Sameena November 22, 2012 at 2:01 pm

xcuse me brothers! neega sollum vasanam irukku 2:155, bt neega antha vasanatha thappa purinchu irukeega. Antha vasanathoda iruthila “Neegal unara maattergala” nu allh keakran. avl uyirudan irupathu naam unarnthulla karuthil alla, nammal unarnthu kolla mudiyatha vearu vagaiyil uyirudan ullanar yendra karuthaiyea ithu tharum. + itha allah namakku theliva 3:169 la “Tham iraivanidam uyirudan ullar” yena koorugiraan

Reply

zunaitha April 4, 2013 at 4:33 pm

Actually [3:169] la Allah nna solgiran yendral ,irai valiyil uyir neetha thiyagigalin nilai kurithu Allah arivikkiran .
!avargal intha ulagathai porutha varai kolla pattavargalaga irunthalum , Marumai yennum nilaiyana ulagil avargal uyir vaalgirargal, yendru Allah koorugiran .
If u need ref see tafsir ibn kathir part 2

Reply

Leave a Comment

Previous post:

Next post: