உங்களில் ஒருவர் இமாமத் செய்ய தகுதியுடையவர்

in தொழுகை

அன்பார்ந்த முஸ்லிம் சகோதரர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்…

நாம் இன்று அல்லாஹ்வுக்கு எவ்வளவோ நன்றி செலுத்த வேண்டும். இப்படி உலகத்தில் 99.99% ஆத முடைய மக்கள் வழிகேட்டில் இருக்க கூடிய சமயத்தில் அல்லாஹ்வையும், அல்லாஹ்வுடைய தீனையும், நபிவழியிலும், குர்ஆனின் ஒளியிலும் சிந்தித்துச் செயல்படக்கூடிய ஒரு சமுதாயம் இன்று நம் வாழ் நாளிலே உருவாகிக் கொண்டு வருகிறது. இதன் காரணத்தினால் நாமும், நம் குடும்பத்தாரும், நம் சந்ததிகளும் நேர்வழி பெற்ற முஸ்லிம்களில் ஒருவராக திகழ ஒரு மாபெரும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. மேலும் இதை உலக மக்களுக்குக் கொண்டு சேர்க்கக் கூடிய பாக்கியமும் நம் அனைவருக்கும் கிடைத்துள்ளது. இப்படி ஒரு பாக்கியம் நமக்கு கிடைக்காது வழிகேட்டிலேயே நாமும் வாழ்ந்து இருந்திருந்தால், எவ்வளவு பெரிய நஷ்டத்தை நாம் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதை நம் எவராலும் ஊகித்து பார்க்க முடியுமா? உலக மக்கள் அனைவரும் கூடி அந்நஷ்டத்தை இவ்வளவுதான் என்று கணிக்க முடியுமா? இல்லை சுவர்க்கம் செல்வது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதைத்தான் கணிக்க முடியுமா?

இவ்வுலகத்தில் மனிதன் தன் அளவற்ற அன்பின் காரணத்தினால் அவர்களுக்கு பிரியமுடையவர்களுக்கு (உற்றார், உறவினர், மனைவி, மக்கள்) அதிக மாக உதவிகள் செய்ய வேண்டும் என்று எண்ணி எவ்வளவோ உதவிகளைச் செய்து வருகிறார்கள். அதில் ஒருவர் சுவர்க்கம் செல்ல வேண்டும் என்று கருதி அல்லாஹ்வுடைய தீனை அழகான முறையில் எடுத்துரைத்துத் தொழுகும்படி செய்தால், அதன் கார ணத்தினால் அவர்கள் சொர்க்கவாதியாகிவிட்டால் இதை விட ஒரு பெரிய உபகாரம் யாராவது ஒருவர் அவருக்குச் செய்துவிட முடியுமா? இல்லை அல்லாஹ்வுடைய தீனை ஒழுங்காகப் புரிந்து கொள்ளாமல் எவர் எவரோ சொன்னதை வைத்துக் கொண்டு அவர் அவர் இஷ்டப்படி வாழ்ந்து தானும் கெட்டு பிறருக்கும் அல்லாஹ்வுடைய தீனை தெளிவான முறையில் கிடைக்கச் செய்யாத காரணத்தினால் அவர்களுடைய மனைவி, மக்கள், உற்றார், உறவினர் இதன் காரணத்தினால் நரகவாதி ஆகி விட்டார்களேயானால், இதைவிட மாபெரும் துரோகம் இவர்களால் செய்திருக்க முடியுமா என்று சிந்தியுங்கள். இதில் எவ்வகையில் நாம் இருக்கிறோம் என்பதையும் சிந்தியுங்கள்.

உலகத்தில் வாழும் மனிதர்களில் வணக்க வழிப்பாட்டில் இருக்கும் அனைவரும் அல்லாஹ்வையும், சொர்க்கத்தையும் தான் தேடுகிறார்கள். நரகத்தை விட்டுப் பாதுகாவல் தேடுகிறார்கள். எதைக் கொண்டு நாம் ஒருவரை நேர்வழியில் இருக்கிறாரா? இல்லையா? என்பதை கணிக்கிறோம் என்றால், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் சொன்ன வழியில் இருக்கிறார்களா? இல்லை அதற்கு மாறு செய்கிறார்களா? என்பதை அறிந்தே முடிவுக்கு வருகிறோம்.

இன்றைய சூழ்நிலையில் நாம் நம் நாட்டுக்கு ஒரு பிரதமரை தேர்ந்தெடுக்க ஒரு அயல் நாட்டு மனிதரைத் தேர்ந்தெடுக்க மாட்டோம். நிச்சயமாக அவர் நம் நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதைப் போன்றே நம் மாநிலத்தின் முதன் மந்திரி நம் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அப்படி அல்லாத பட்சத்தில் அவர் நம் மாநிலத்தில் பல வருடங்களுக்கு முன் குடியேறிய வராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வழக்கம். அயல்நாட்டாரை நம் நாட்டுக்கு பிரதம ராக இருங்கள் என்பதோ அல்லது மற்ற மாநிலத்தில் வாழக்கூடியவரை நம் மாநிலத்தில் முதன் மந்திரியாக இருங்கள் என்று கூறுவது மடமையாகும். இதைப் போலவே நம் முஹல்லாவில் வாழக்கூடிய வரையே நம் முஹல்லாவுக்கு, பள்ளிக்கு முதவல்லியாகவோ, அமீராகவோ தேர்ந்தெடுக்க வேண்டும். அதை அல்லாமல் வேறு ஊரில் வாழக்கூடியவரை முதவல்லியாகவோ, அமீராகவோ தேர்ந்தெடுப்பது ஓர் அர்த்தமற்ற செயலாகும்.

1. திர்மிதியில் ஒரு ஹதீஃத் கூறுகிறது:
மாலிக் பின் ஹுவைரிஃத்(ரழி) எங்களைச் சந்திக்க எங்கள் மஸ்ஜிதுக்கு வரக்கூடியவராக இருந்தார்கள். ஒரு தடவை மஃரிப் உடைய நேரத்தில் அவர் வந்தார். நாங்கள் அவரை நீங்கள் முன் சென்று எங்களுக்கு இமாமத் செய்வீராக என்று சொன்னோம். அதற்கு அவர் மறுத்து விட்டார். (இமாமத் செய்வதை) உங்களில் ஒருவர் முன் சென்று தொழ வைக்கட்டும். தொழுததற்குப் பின் காரணத்தைக் கூறுகிறேன் என்று சொன்னார். பின் கூறினார் முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு கூட்டத்தாரை நீங்கள் சந்திக்கச் சென்றால் நீங்கள் இமாமத் செய்யாதீர்கள். அவர்களில் ஒரு வரையே இமாமத் செய்யச் சொல்லுங்கள். அறிவிப்பவர் : மாலிக் பின் ஹுவைரிஃத்(ரழி)

2. சஹிஹீல் புகாரி VI/P,435/H,782,787
அறிவிப்பவர் : அபூகிலாஃபா(ரழி)

ஒரு நாள் மாலிக் பின் ஹுவைரிஃத்(ரழி) எங்களைச் சந்திக்க பள்ளிக்கு வந்தார்கள். அப்பொழுது கடமையான தொழுகை அல்லாத நேரத்தில் நான் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் தொழுத முறையை காட்டட்டுமா என்று கூறி தொழுது காட்டினார். தொழுகை நேரம் வந்தவுடன் அதனை கூறுங்கள்; உங்களில் வயதில் மூத்தவர் தொழ வையுங்கள். (இமாமத் செய்யுங்கள்) என்று கூறினார்.

3. முஸ்லிமிலும், திர்மிதியிலும் உள்ள ஒரு ஹதீஃத்: அறிவிப்பவர் : அபூமஸ்ஊத்(ரழி)

நபி(ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் நெறி நூலை அதிகம் ஓதியவர் ஒரு சமுதாயத்திற்கு இமாமத் செய்யட்டும். ஓதுவதில் பலரும் சமநிலையில் இருந்தால் அவர்களில் நபிவழியை நன்கு தெரிந்தவர் இமாமத் செய்யட்டும். நபிவழியை நன்கு தெரிந்தவர் பலர் சமநிலையில் இருந்தால் ஹிஜ்ரத் செய்வதில் அவர்களில் முந்தியவர் இமாமத் செய்யட்டும். ஹிஜ்ரத்திலும் அவர்கள் சமநிலையில் இருந்தால் அவர்கள் வயதில் மூத்தவர் இமாமத் செய்யட்டும். ஒரு மனிதரின் அதிகாரத்திற்குட்பட்ட விஷயத்தில் இன்னொருவர் அதிகாரம் செலுத்தக் கூடாது. ஒரு மனிதனின் இல்லத்தில் அவனுக்கே உரிய ஆசனத்தில் அவனது அனுமதியின்றி மற்றவர் அமரக் கூடாது.

மேற்காட்டிய ஹதீஃத்களில் இருந்து நமக்கு என்ன தெளிவாகிறது என்றால், இமாமத் செய்ய தகுதியுடையவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களே. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களே இமாமத் செய்துள்ளார்கள்.

அபூபக்கர்(ரழி) காலத்தில் அவர்களே இமாமத் செய்துள்ளார்கள். இதைப்போலவே உமர்(ரழி), உஸ்மான்(ரழி), அலீ(ரழி) அவர்களுடைய காலத்திலும் அவர்களே இமாமத் செய்துள்ளார்கள். இதைப் போலவே ஒரு நாட்டுக்கோ, ஊருக்கோ தலைவராக, அமீராக நியமிக்கப்பட்டவரே இமாமத் செய்துள்ளார்கள். இதற்கு எவரும் காசோ, பணமோ, எவ்வகையான கூலியோ பெற்றதாக சரித்திரம் இல்லை. மாறாக எவ்வகையிலும் இமாமத் செய்வதற்கு கூலிகள் வாங்க கூடாது என்ப தற்கு பல குர்ஆன் வசனங்கள், ஆதாரபூர்வமான ஹதீஃத் கள் உள்ளன. உதாரணமாக உஸ்மான் இப்னு அபீல் ஆஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கக் கூடிய ஹதீஃத் அபூதாவூத், திர்மிதியில் உள்ளது. முஅத்தினை நியமனம் செய்தால் எந்தவிதமான பிரதிபலனும் (கூலியோ, சம்பளமோ) பெற்றுக் கொள்ளாத ஒருவரை நிய மிக்க வேண்டும் என்று நபி(ஸல்) என்னிடம் இறுதியான, உறுதிமொழி வாங்கினார்கள் என்று கூறினார்கள்.

இப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு முஅத்தின் ஒரு ஊருக்கு, ஒரு முஹல்லாவுக்கு ஒரு பள்ளிக்கு, ஒரு பர்ழான நேரத்திற்கு ஒருவர் ஒருமுறை அதான் கூறினால் போதுமானதாயிற்று, ஊரில் இருக்கும் அனைவரும் அதைச் செய்யத் தேவையில்லை. அப்படி இருந்த பட்சத்திலும் நபி(ஸல்) எப்பிரதிபலனையும் (மனிதர்களிடம்) எதிர்பாராத ஒரு நபரை முஅத்தினை நியமிக்கும்படி கட்டளையிட்டிருக்கும் பட்சத்தில் எல்லா மனிதர்கள் மீதும் கடமையான ஒரு தொழுகையை நிறைவேற்றக் கூடிய அல்லாஹ்வின் மஸ்ஜிதில் அத்தொழுகையை நிலை நாட்ட ஓர் இமாம் நியமிக்கப்பட்டால் எவ்வகையில் கூலி பெற அனுமதிக்கப்படும்.

மேலும் நபி(ஸல்) கூறுகிறார்கள் :

1. குர்ஆனை ஓதுங்கள்! அதன் மூலம் சாப்பிடவோ, பொருள் திரட்டவோ செய்யாதீர்கள். நபிமொழி நூல்கள் : அஹ்மத், தஹாவீ, தப்ரானீ, இப்னு அஸாகிர்.

2. எவன் குர்ஆனை ஓதுகிறானோ அவன் அல்லாஹ்விடமே கேட்கட்டும். வருங்காலத்தில் குர் ஆனை ஓதிவிட்டு மக்களிடமே (கூலி) கேட்பவர்கள் தோன்றுவார்கள் (என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள்.) நூல்கள் : திர்மிதி, அஹ்மத்.

3. குர்ஆனை ஓதுங்கள், அறிந்து கொள்ளுங்கள் அதன் மூலம் பொருள் திரட்டவோ, சாப்பிடவோ செய்யாதீர்கள். நூல்கள் : அஹ்மத், தப்ரானி

சாதாரணமாக மனிதர்கள் குர்ஆன் வசனங்களை விற்க வேண்டாம் என்றால் இப்பொழுது கிடைக்க கூடிய அச்சடித்து பைண்ட் செய்யப்பட்ட குர்ஆன் நூல்களையே என்று எண்ணுகிறார்கள். அப்படியல்ல, அதை விற்கவோ, வாங்கவோ எவ்வித தடைகளும் இல்லை. ஆனால் எதைத் தடை செய்யப்பட்டு உள்ளது என்றால், குர்ஆன் வசனங்கள் வஹீ மூலம் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. அதை அவர்கள் மனனம் செய்தார்கள். அதைப் பிறரிடம் எடுத்துரைத்தார்கள். அதை ஒவ்வொரு வரும் இதைப்போலவே மனனம் செய்து கொண்டார்கள். அதை ஓதியதற்கு பகரமாக மக்களிடம் பணம்/கூலி பெற்றல் கூடாது என்று இதைத்தான் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் எச்சரித்துள்ளார்கள்.

சகோதர, சகோதரிகளே! சிந்தித்துப் பாருங்கள்!

எவரேனும் குர்ஆனை ஓதாமல் இமாமத் செய்ய முடியுமா? நிச்சயமாக முடியாது.அப்படி இருக்கும் பட்சத்தில் அவர் இமாமத்திற்குக் காசு பெற்றுக் கொள்வது ஹராமாகும். அவர் கேட்பதும் ஹராமாகும். கொடுப்பதும் ஹராம் ஆகும்.

அல்லாஹ் சுப்ஹானஹு த ஆலாவை பொறுத்த வரையில் ஹராமில் சிறியது, பெரியது இல்லை. ஹராம் என்றால் ஷைத்தானுக்கு வழிபடுதல், அது மதுவோ, மதுக்கடையோ, மது தயாரிப்போ, விபச்சாரியோ, விபச்சார விடுதியோ, வட்டியோ, வட்டிக் கடையோ, காசுக்காக இமாமத் செய்வதோ அல்லாஹ்வின் முன்னிலையில் அனைத்து ஹராமான செயல்கள் புரிபவர்கள் பாவத்தில் சமநிலையில் உள்ளார்கள். ஷைத்தானுக்கு அடிபணிந்தவர்களாக உள்ளார்கள். இந்நிலையில் அல்லாஹ்விடம் நன்மையை நாடுவது அறிவீனமாகும்.

ஆகையால் இமாமத் செய்பவர்களை தம் முஹல்லாவாசிகளாக இருக்கக் கூடியவர்களிலிருந்தே (தலைவர்களாக) தேர்ந்தெடுத்து குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் தொழ வைப்பவராகவும், அவர் இல்லாத பட்சத்தில் அவருக்கு அடுத்தபடி யானவர், அல்லது அவருக்கு அடுத்தபடியானவர், அல்லது அவருக்கு அடுத்தபடியானவர் அப்படியே அந்த முஹல்லாவாசிகள் அனைவருமே தொழ வைக்க வாய்ப்பும் கிடைக்கும். குர்ஆன், ஹதீஃதை தெளிவான முறையில் அறிய வாய்ப்பும் கிட்டும், அப்படியில்லாதபட்சத்தில் ஒரு மனிதருக்கு காசை கொடுத்து தொழ வைக்கச் சொன்னால் அவர் இல்லையெனில் வேறு ஒருத்தரை அதே கூலிக்கு இமாமத் செய்ய வைப்பார்கள். இந்த அடிப்படையில் போய்கொண்டிருந்தால் நம்மிடம் உள்ள தீன் சிறுக சிறுக அழிந்துவிடக் கூடும். இச்சூழ்நிலையை நம் கண்முன்னால் பார்த்துக் கொண்டுள்ளோம். அல்லாஹ் பாதுகாப்பானாக; மேலும் அவனுடைய தீனை ஓங்கச் செய்ய நமக்கு அருள்புரிவானாக. (ஆமீன்)

நஸீர் அஹ்மது, குன்னூர்

Leave a Comment

Previous post:

Next post: